வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் மாநில இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க.வுக்கு 150 இடங்களில் வெற்றி வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவிலேயே வரைவு தேர்தல் அறிக்கை வெளியிட்ட ஒரே கட்சி பா.ம.க. தான். இன்னும் 3 மாதங்களில் விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், பாட்டாளிகள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் என அனைவரையும் சந்தித்து இறுதி அறிக்கை வெளியிட உள்ளோம். நாங்கள் வெளியிட்ட வரைவு அறிக்கையில் இலவசங்கள் இருக்காது. விவசாயிகளுக்கு மட்டும் இடுபொருட்கள் இலவசமாக வழங்குவோம்.
கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சேவைகள் மட்டுமே இலவசமாக மக்களுக்கு அளிப்போம். முதல் நாள் முதல் கையெழுத்து மது ஒழிப்பாக தான் இருக்கும். அ.தி.மு.க. தவிர அனைத்து கட்சிகளும் மதுவை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். இது எங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. அனைவருக்கும் சி.பி.எஸ்.இ. பாடத்திற்கு சமமான கட்டணமில்லா கல்வி வழங்கப்படும். மாவட்டந் தோறும் மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்படும். அங்கேயே சிறப்பு ஆஸ்பத்திரிகள் உருவாக்கப்படும்.
வேலூர் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக வேலூர், திருப்பத்தூர், அரக்கோணம் என 3-ஆக பிரிப்போம். கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகள் நஷ்டப்படாமல் அவர்களின் தேவைக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்வோம். தொழில் தொடங்க ஏற்பாடு செய்து தரப்படும். வேலைவாய்ப்பு அதிக அளவில் அளிப்போம். தமிழகத்தில் உள்ள 44 லட்சம் ஹெக்டேர் விலை நிலங்களை 1 கோடி லட்சம் ஹெக்டேராக்குவோம். அரசு ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை சம்பளம் வழங்குவோம்.
ஏனென்றால், அவர்கள் வாங்கும் சம்பளத்தை 10 நாளில் காலி செய்துவிட்டு, பின்னர் உள்ள 20 நாட்களுக்கும் வட்டிக்கு வாங்கி தான் தங்களது குடும்ப செலவுகளை எதிர்கொள்கிறார்கள். அவ்வாறு வழங்குவது சாத்தியமான ஒன்று தான். கல்வித்துறையில் ஆண்டிற்கு செலவிடப்படும் ரூ.20 ஆயிரம் கோடியில், ரூ.12 ஆயிரம் கோடி ஊழல் செய்யப்படுகிறது. அதுபோக பணி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக லஞ்சம் வாங்கப்படுகிறது. கல்வித்துறையில் இந்தியாவில் தமிழகம் மிகவும் பின்தங்கி இருக்கிறது.
எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தவர்கள் 14 சதவிதம் பேர் தான் தமிழகத்தில் இருக்கிறார்கள். ஐ.ஐ.டி. தேர்வுகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் குறைந்த அளவிலேயே தேர்வாகி இருக்கிறார்கள். நாங்கள் சமச்சீர் கல்வியை சி.பி.எஸ்.இ. கல்விக்கு இணையாக கொண்டு வருவோம். பெண் போலீஸ் அதிகாரி விஷ்ணுபிரியா மரணத்திறகு சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என தமிழக அரசு கூறுகிறது.
அ.தி.மு.க. மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். தி.மு.க. மீது நம்பிக்கை இழந்து இருக்கிறார்கள். தற்போது பா.ம.க. மீது நம்பிக்கையில் உள்ளனர். மு.க.ஸ்டாலின் தனது சிறு வயது ஆசைகளை தற்போது நமக்கு நாமே திட்டம் மூலமாக நிறைவேற்றி கொண்டிருக்கிறார். இது தேர்தல் நேரத்தில் நடத்தும் நாடகம் என்பதை மக்கள் உணர்வார்கள். இது எடுபடாது.
50 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்களால் குடிசையை ஒழிக்க முடியவில்லை. தற்போது குடிசை குடிசையாக சென்று வயதான முதியவர்களை பார்த்து வருகிறார்கள். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் குடிசைகளே இருக்காது. ஸ்டாலின் கேள்வி கேட்பதற்கு தகுதி இல்லாதவராக இருக்கிறார் என அவர் கூறினார்.