ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மடத்தில் ஆக.9 ஞாயிறு அன்று மாலை கந்த சஷ்டி கவச பாராயணம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் மடத்தின் 24 வது பட்டம் ஜீயர் ஸ்வாமிகள், ஹிந்து ஒற்றுமையை ஏற்படுத்தும் வண்ணம் இறை நம்பிக்கையாளர்கள் அனைவரும் தங்களின் இல்லங்களில் தீபம் ஏற்றி கந்த சஷ்டி கவச பாராயணம் செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி பலரும் தங்கள் இல்லங்களில் கந்த சஷ்டி கவச பாராயணம் செய்து வேல் பூஜை மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயரும், தமது மடத்தில் கந்த சஷ்டி கவச பாராயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்தார். அதன்படி, அன்பர்கள் சிலர் மடத்தில் அமர்ந்து சஷ்டி கவசம் பாராயணம் செய்தனர்.
கந்த சஷ்டி கவச பாராயண நிகழ்ச்சிக்கு வைணவ ஜீயர் மடத்தில் இடம் கொடுத்தது குறித்து பலரும் தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர். அதே நேரம், இது குறிப்பிடத் தகுந்த மாற்றம் என்று தங்கள் பாராட்டையும் தெரிவித்தனர்.
முன்னதாக, சைவ ஆதீனங்கள், முருக பக்தர்கள் ஆக.9 ஞாயிறு அன்று கந்த சஷ்டி கவச பாராயணம் வேல்பூஜை நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்திருந்த போது, அதை ஆதரித்து, இறை நம்பிக்கையாளர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார் ஜீயர் ஸ்வாமிகள். ஆனால், சில தீவிர வைணவ பக்தர்கள் ஜீயர் ஸ்வாமிகளின் இந்த அழைப்புக்கு வருத்தம் தெரிவித்து, அவருக்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்.
ஆனால், இது இந்து ஆன்மிக ஒற்றுமைக்கான விஷயம் என்று கூறி, விமர்சனங்களை எல்லாம் புறம் தள்ளி, தமது மடத்திலேயே அன்பர்கள் வந்திருந்து சஷ்டி கவச பாராயணம் செய்ய ஏற்பாடு செய்தார் ஜீயர் ஸ்வாமிகள்.
இது குறித்து அவர் குறிப்பிட்ட போது, தாயார் ஆண்டாள் குறித்து வைரமுத்து என்ற கவிஞர் இழிவுபடுத்திப் பேசிய போது சமய பேதம் இல்லாமல் அனைவருமே சேர்ந்து குரல் கொடுத்து போராட்டத்தில் குதித்தனர். அது போல இன்று கந்தனை இழிவுபடுத்தி ஒரு கயவர் கூட்டம் பேசியுள்ளது. ஓர் ஆன்மிக சாதகராக இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது நம் கடமை. எனவே நம் மடத்தில் இதற்கு இடம் கொடுப்போம். நீங்கள் வந்து பாராயணம் செய்யுங்கள் என்று அன்பர்களை அழைத்ததாகக் கூறினார்.
அதன்படி, மடத்தில் சமூக ஒற்றுமையோடு தனிநபர் இடைவெளியைக் கடைபிடித்து விளக்கேற்றி கந்த சஷ்டி கவசத்தை அன்பர்கள் பாராயணம் செய்தனர்.