இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுவாதி மோகன் என்பவர் நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலத்தின் வழிநடத்தும் குழுவின் தலைவராக பணியாற்றியுள்ளார்.
விண்வெளி மற்றும் விமானத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற சுவாதி மோகன் நாசாவின் இரு முக்கிய திட்டங்களில் பணியாற்றியுள்ளார்.
செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாசா விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பினர். செவ்வாயின் மேற்பரப்பை ஆய்வு செய்யவும், அங்கிருந்து மண் மற்றும் கற்களை பூமிக்கு திரும்பி எடுத்துவரவும், இந்த விண்கலம் அனுப்பப்பட்டது.
பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலம் ஜெசெரோ என்றழைக்கப்படும் செவ்வாயின் மத்திய ரேகைப் பகுதிக்கு அருகில் உள்ள ஓர் ஆழமான பள்ளத்தில் தரையிறங்கியுள்ளது.
நாசாவின் செவ்வாய் கிரக ஆய்வு
பெர்சிவரன்ஸ் ரோவர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாய் கிரகத்தின் பாறைகளைத் துளையிடுவது மற்றும் அக்கோளில் முன்பு உயிரினங்கள் வாழ்ந்திருந்ததற்கான ஆதாரங்களைத் தேடும் என நாசா தெரிவித்துள்ளது.
இந்த ரோவர் செவ்வாயின் மேற்பரப்பை வெற்றிகரமாக அடைந்த செய்தியை நாசா புரொபல்சன் லேபரேட்டரி வழிநடத்தும் குழு தலைவர் சுவாதி மோகன் உறுதி செய்தார்.
இவர் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார். கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்த சுவாதி, தன்னுடைய ஒரு வயதில் பெற்றோருடன் அமெரிக்காவுக்கு சென்றார். பள்ளியில் படிக்கும்போது, குழந்தைகள் நல மருத்துவராக வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருந்து.
அதே நேரத்தில் ஸ்டார் டிரெக் என்ற டிவி நிகழ்ச்சியைப் பார்த்து, புதிய உலகங்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கவே அவரது கவனம் விண்வெளியின் பக்கம் திரும்பியது. விண்வெளி ஆய்வில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுடன், ஆராய்ச்சி முடித்து, டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.
நாசாவில் பணியை தொடங்கிய சுவாதி கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்த பெர்சிவரன்ஸ் ரோவர் திட்டத்தில் முதலில் இருந்தே ஈடுபட்டு வந்தார் சுவாதி. ஜி.என். அண்ட் சி எனப்படும் வழிகாட்டுதல், இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் பிரிவின் தலைவராக இருந்தார்.
ரோவர் வாகனம், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்பதற்கான தொழில்நுட்பத்தை இவர் உருவாக்கியுள்ளார்.
நாசாவின் சனி கிரகத்துக்கான பயணம், நிலவுக்கான பயண திட்டங்களிலும் சுவாதி ஈடுபட்டுள்ளார். புதிய உலகத்தை காண வேண்டும் என்ற சுவாதியின் கனவு நனவாகியுள்ளது. அவரின் பெற்றோர்கள் பிறந்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.