திருமணம் செய்த பட்டதாரி புதுமணத்தம்பதியினர் மாட்டு வண்டியில் பயணம் செய்த சம்பவம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வளர்ந்து வரும் நவநாகரிக உலகத்தில் புதுமண தம்பதியினர் ஊர்வலமாக செல்வதற்கு பல்வேறு நவீன வசதிகளுடன் வாகனங்கள் வலம் வந்து கொண்டிருக்கின்ற சூழலில்,இன்றும் பழமை மாறாமல் மாட்டு வண்டியில் புதுமணத்தம்பதியினர் பயணித்துள்ளனர்.
பொள்ளாச்சி அடுத்த நெகமம் பகுதியை சேர்ந்த பட்டதாரி இளைஞர் பூபதி என்பவருக்கு பணப்பட்டி பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இந்திரா என்ற பெண்ணுக்கும் இன்று காலை அங்கிதொழுவு காளியம்மன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து அங்கிருந்து கேப்பாநூர் புதூர் மணமகன் இல்லத்துக்கு புதுமணத் தம்பதியர் மாட்டு வண்டியில் புறப்பட்டனர். மாட்டு வண்டியை தனியாக மணமகனே ஓட்ட, அவருடன் மணமகள் இந்திரா அமர்ந்திருந்தார்.
மற்ற உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மற்ற மாட்டு வண்டியில் கூடவே ஊர்வலமாக வந்தனர். தங்களுடைய உறவினர் மற்றும் நண்பர்கள் புடைசூழ ஊர்வலமாக சாலையில் வந்ததை ஊர் மக்கள் வியப்புடன் பார்த்து மணமக்களை வாழ்த்தினர்.