காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் உள்ள பூஜை பொருள் மாற்றம் செய்யப்பட்டு, வெள்ளியில் செய்யப்பட்ட வில் அம்பு வைத்து பூஜை செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் சிவவாக்கியசித்தரால் பாடல் பெற்ற தலம். சிவன்மலை கோவிலின் சிறப்புகளில் பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டி.
நாட்டில் ஏற்படும் முக்கிய நிகழ்வுகளை முன்னதாகவே உணர்த்தி வருவதால் காரணமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, குறிப்பால் ஒரு பொருளை உணர்த்தி அது தொடர்பான பொருட்களை உத்தரவுப் பெட்டியில் வைக்க உத்தரவிடுவார்.
அப்பொருள் பெட்டியில் வைத்து பூஜை செய்யப் படுவது தொன்று தொட்டு வழக்கத்தில் இருந்து வருகிறது. உத்தரவு பெற்ற பக்தர் கோவிலுக்கு வந்து கூறும் தகவலை, அர்ச்சகர்கள் சுவாமி சந்நிதியில், வெள்ளை மற்றும் சிவப்பு பூ வைத்து உத்தரவு கேட்பர். வெள்ளை பூ வந்தால் மட்டுமே, அந்தப் பொருள் கண்ணாடிப் பேழையில் வைத்து பூஜை செய்யப்படும்.
இதுவரை இங்கு மண், துப்பாக்கி, ஏர் கலப்பை, ரூபாய் நோட்டு,நோட்டு புத்தகம், சைக்கிள், அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம், சர்க்கரை, தெய்வஜாதகம், குங்குமம் என வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது.
ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வைத்து பூஜை செய்யப்படும் பொருளின் காரணமாக நாட்டில் அந்தப் பொருள் தொடர்பான ஆக்கம், அழிவு போன்ற செயல்கள் நடைபெறும் என்பது நம்பிக்கை.
தங்கம் வைத்து பூஜை செய்தபோது, தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டது. மண் வைத்து பூஜை செய்த போது நிலங்களின் மதிப்பு அதிகமானது. தண்ணீர் வைத்து பூஜை செய்யப்பட்ட போது சுனாமி ஏற்பட்டது. அவ்வாறு வைத்து பூஜை செய்யப்படும் பொருள் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது.
இன்றுவரை உத்தரவுப் பெட்டியில் இருந்த பச்சை வேட்டி, துண்டு, வெள்ளை சட்டை, மதிப்பு இழந்த 500 ரூபாய் 2 மற்றும் 5,2,1 ரூபாய் நாணயம் என மொத்தம் ரூ.1008, இரண்டு ராசி கட்டங்கள், தேங்காய், எலுமிச்சை, வெற்றிலை, பூ, பாக்கு ஆகியவற்றை எடுத்துவிட்டு திண்டுக்கல் மாவட்டம் ஒய்யம்மார் பட்டியைச் சேர்ந்த ரேணுகாதேவிக்கு உத்தரவான வெள்ளியினாலான வில் அம்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது.
இது குறித்து சிவாச்சார்யர்கள் கூறுகையில்… உலகத்தில் தற்போது நடக்கும் அனைத்து துரோகச் செயல்களும், வேருடன் அழிக்கப்படும். தர்மம் நிலைநிறுத்தப்படும் என்பதை உணர்த்துவதாக இது அமைந்துள்ளது. பக்தர்களுக்கும் ஹிந்து தர்மத்துக்கும் நடக்கும் சீர்கேடுகள் அனைத்தும் விலகும். கோவில்களின் பாரம்பரியமும், மரபுகளும் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்தனர்.