பெரம்பலூர் தனியார் அரிசி ஆலையில் இருந்த அரிய வகை வெள்ளை ஆந்தையின் 4 குஞ்சுகள் வனத்துறையிடம் ஒப்படைப்படைக்கப்பட்டது.
பெரம்பலூர் துறையூர் சாலையில் கல்யாண் நகர் பகுதியில் தனியார் அரிசி ஆலை உள்ளது. இதில் அரவை பணிகள் தற்போது நடைபெறவில்லை.
இங்குள்ள அரிசி ஆலை வளாகத்தில் குளிர்ச்சியான பகுதியில் வசிக்கக்கூடிய வெள்ளைநிற ஆந்தையின் 4 குஞ்சுகள் இருப்பது தெரியவந்துள்ளது. தாய் பறவையை காணவில்லை.
இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில், பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ், பெரம்பலூர் வனச்சரகர் சசிக்குமார் ஆகியோர் உத்தரவின் பேரில், வனக்காப்பாளர் அன்பரசுவிடம் அந்த ஆந்தை குஞ்சுகளை ரைஸ்மில் ஊழியர்கள் ஒப்படைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து 4 ஆந்தை குஞ்சுகளும் அருகிலுள்ள குரும்பலூர் காப்புக்காடு பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பான இடத்தில் விடப்பட்டது.
இதுகுறித்து பெரம்பலூர் வனச்சரகரிடம்கேட்ட போது, இது சாதாரண வகை ஆந்தைதான். தாய் பறவை வெளியே சென்று விட்டது. நீண்டநாள் பயன்படுத்தாமல் இருந்த அறையில் குஞ்சு பொறித்து, வசித்து வந்துள்ளது.
கோட்டான் வகை ஆந்தைகள்தான் நமது பகுதிகளில் அதிகம் இருக்கும். இதுவும் பச்சைமலைகளில் குளிர்ச்சியான பகுதிகளில் காணப்படும் என தெரிவித்தார்.