சிஷ்யர்:
சிலருக்கு பூஜை செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஆனால் அதை செய்வதற்கு சரியான வாய்ப்பு இல்லை. தியானத்திலேயே காலத்தை கழிக்கலாம் என்றால் அவர்களுக்கு தியானமும் சரியாக வருவதில்லை. இப்படிப்பட்டவர்கள் மனதை ஒருநிலைப்படுத்த என்ன செய்யலாம்?
ஆச்சார்யாள்;
அவர்கள் மானசீக பூஜையை செய்யலாம்.
சிஷ்யர்: மானசீக பூஜை என்றால் என்ன?
ஆச்சாரியாள்:
மானசீக பூஜை என்றால் மனதால் செய்யப்படும் இறைவனின் பூஜை என்று பொருள். சாமானியமாக பூஜை செய்வதற்கு புஷ்பம் தூபம் தீபம் போன்றவை தேவைப்படுகிறது. எவ்வாறு வெளி பூஜையில் நாம் செய்வோமோ அந்த உபசாரங்களை மனதாலே கற்பனை செய்து இறைவன் வந்திருக்கிறான் என்று கருதி எல்லாவற்றையும் செய்தால் அதுவே மானசீக பூஜை.
சிஷ்யர்:
மானஸீக பூஜை செய்யும் போது தியான ஸ்லோகங்கள் இவைகள் எல்லாம் எப்படி செய்வது?
ஆச்சார்யாள்:
இறைவன் நம் முன் வந்து இருக்கிறான். அவனை நாம் வரவேற்க வேண்டும். அவனுக்கு ஒரு ஆசனம் தர வேண்டும் என கருதி ஒரு ஆசனத்தை கொடுப்போம். அவன் ஆசனத்தில் அமர்ந்த பிறகு நாம் அவன் கை கால்களை அலம்பி ஆசமனம் செய்யும் படி செய்து பிறகு சுத்தமான ஜலத்தை தருவோம். அவன் அதை ஏற்றுக் கொள்வான். மேலும் அவனுக்கு ஸ்நானம் செய்து வைப்போம். இதுபோல் நாம் மனதாலே எல்லாவற்றையும் செய்து கொண்டே போகலாம். இவைகளை எல்லாம் அவன் ஏற்றுக் கொள்கிறான் என கருதி செய்து கொண்டே போகலாம்.
சிஷ்யர்:
இறைவனது உருவம் அவன் மானசீக பூஜை செய்கையில் நிலையாக நிற்காவிட்டால் என்ன செய்வது?
ஆச்சார்யாள்:
அவன் மானசீக பூஜை செய்யும் பொழுது அவனது இஷ்ட தேவதையின் சித்திரத்தை எதிரில் வைத்துக் கொள்ளலாம். சித்திரத்தை கவனித்தவாறு கண்களை திறந்து சிறிது நேரம் செய்யலாம். சற்று நேரம் கழிந்த பிறகு இறைவன் அங்கு அமர்ந்திருக்கிறான் என்று கருதிப் பூஜையை தொடரலாம். முடியவில்லை என்றால் மற்றொரு முறை கண்களை திறந்து பூஜையை தொடரலாம். இங்கு எல்லாமே மனத்தால் செய்யப்படுகின்றது.
சிஷ்யர்:
மானசீக பூஜை செய்வதற்கு ஏதாவது நியமம் இருக்கிறதா?
ஆச்சாரியாள்:
பூஜை செய்வதற்கு எந்த விதமான நியமமுமில்லை. எந்நேரத்திலும் செய்யலாம். எந்த முறையில் வேண்டுமானாலும் செய்யலாம். இறைவனை மானசீக பூஜை செய்தால் விசேஷமான பலனுண்டு. மனதும் புனிதமாகும். அவனுடைய அருளையும் பெறலாம். மானஸீகபூஜையை தெரிந்து கொள்வதற்கு சிவ மானச பூஜை அல்லது ம்ருத்யுஞ்ச மானஸ பூஜா ஸ்தோத்ரம் போன்ற ஸ்தோத்ரங்களைப் பார்த்தால் அது பற்றி புரிந்து கொள்ளலாம்.
சிஷ்யர்:
மானசீக பூஜையை இன்னார் தான் செய்ய வேண்டும் என்ற தகுதி வேறுபாடுகள் உள்ளனவா?
ஆச்சாரியாள்:
மானசீக பூஜையை எல்லோரும் செய்யலாம். இவன் செய்ய வேண்டும் அவன் செய்யக்கூடாது என்று கிடையாது.
சிஷ்யர்:
மானசீக பூஜை எவ்வளவு நேரத்திற்கு செய்ய வேண்டும்?
ஆச்சார்யாள்:
எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம். மானஸீக பூஜை செய்வது பழக்கத்திற்கு வரும்வரையில் நீண்டகாலம் அமருவதென்பது சற்று கடினமாக இருக்கலாம். பழக பழக அதில் ருசியும் ஒருவன் அதிகமாக ஒருவன் பெறுவான்