மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மாந்தோப்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம், பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதியில் கனமழை பெய்யும் காலங்களில் இந்த அருவியில் நீர்வரத்து அதிகரிக்கும்.
இயற்கையான சூழலில் அமைந்துள்ள இந்த அருவிக்கு தமிழகம் மட்டுமல்லாமல், வெளிமாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்வர்.
ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இதன்படி தற்போது மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பருவமழை தொடங்கி பெய்து வருவதால், அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், அருவிக்கு அருகில் உள்ள மாந்தோப்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.