சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் எழுந்த சர்ச்சைகள் தொடர்பாக விசாரித்து அறிய, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று தமிழக அரசால் அமைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் உறவினர்கள், அரசு ஆலோசகர்கள், உடன் இருந்தவர்கள் என அனைவருக்கும் இந்த விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. அவர்கள் விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகி ஜெயலலிதா மரணம் தொடர்பாக தங்கள் வாக்குமூலத்தை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா தனது வாக்குமூலத்தை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. இருப்பினும், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப் படாமல் வெகு நாட்களாக சசிகலா தரப்பு இழுத்தடித்தது. இந்நிலையில், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய, தனக்கு கால அவகாசம் தேவை எனக் கோரி சசிகலா அளித்த மனுவை விசாரணை ஆணையம் தள்ளுபடி செய்துள்ளது. ஐந்து முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டும் சசிகலா பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்றும், உரிய காலத்துக்குள் தாக்கல் செய்யப்படா விட்டால் சசிகலாவிடம் நேரில் விசாரணை நடத்த நேரும் என்றும் ஆணையம் எச்சரித்தது. இதை அடுத்து இன்று சசிகலா தரப்பில் இருந்து ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப் பட்டது.
சசிகலா தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் பல தகவல்களைக் கூறியுள்ளார். அதில், சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதாவுக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டது. அவருக்கு சர்க்கரை அளவும் கூடியது. இதனால் அவதிப்பட்ட அவருக்கு மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், வீரியம் குறைந்த ஸ்டிராய்டு மருந்துகள் பரிந்துரைக்கப் பட்டன. அவற்றை அவர் எடுத்துக் கொண்டார்.
அன்று ஜெயலலிதா பல் விலக்கிக் கொண்டிருந்த போது திடீரென உதவி கோரி அழைத்தார். நான் சென்று பார்த்தபோது, அவர் அரைகுறை மயக்கத்தில் கிடந்தார். இதை அடுத்து அவரை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று படுக்கையில் கிடத்தினேன். பின் டாக்டர் சிவக்குமாருக்கு போன் செய்தேன். சிவக்குமார் வந்து பார்த்துவிட்டு, உடனடியாக அப்பல்லோ நிர்வாகத்தில் ப்ரீத்தி ரெட்டியின் கணவரிடம் பேசினார். தொடர்ந்து அப்பலோ ஆம்புலன்ஸ் வரவழைக்கப் பட்டது. அதில் ஜெயலலிதாவை உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அப்போது அவருக்கு நினைவு வந்தது. நாம் எங்கே செல்கிறோம் என்று கேட்டார். நான் மருத்துவமனைக்கு என்று பதிலளித்தேன்… இவ்வாறு கூறியுள்ளார் சசிகலா.
மேலும், ஜெயலலிதாவின் அனுமதியுடன் அவ்வப்போது அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகளை வீடியோ பதிவு செய்துள்ளதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார்.
கடந்த 2015, 2016ஆம் ஆண்டுகளில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போதும், தான் வீடியோ எடுத்துள்ளதாகக் கூறியுள்ளார். அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது நான்கு முறை வீடியோ பதிவு செய்ததாகவும், அனைத்து வீடியோக்களும் ஜெயலலிதாவின் அனுமதி பெற்றே எடுக்கப் பட்டதாகவும் சசிகலா கூறியுள்ளார். மேலும் ஜெயலலிதா சிகிச்சை வீடியோக்கள் அனைத்துமே நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 22ஆம் தேதி ஜெயலலிதாவை அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் மருத்துவமனையில் வந்து பார்த்ததாகவும், அவர் அறையின் கண்ணாடி வழியே பார்த்ததாகவும், அவரை நோக்கி ஜெயலலிதாவும் கையை உயர்த்தியதாகவும் கூறியுள்ளார் சசிகலா. மேலும் செப்டம்பர் 27ஆம் தேதி அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து அழைத்து வரப்பட்ட போது தனது தனி பாதுகாப்பு அதிகாரிகளை நோக்கி தான் தற்போது நலமாக இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்ப உள்ளதாகவும் ஜெயலலிதா கூறினார் என்று தெரிவித்துள்ளார் சசிகலா.
ஜெயலலிதா, பாதுகாப்பு அதிகாரிகளிடம் பேசியதை ஓ.பன்னீர் செல்வம், தம்பிதுரை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் பார்த்ததாகவும் சசிகலா கூறியுள்ளார்.
தனக்கு உடல் நிலை மோசமாக இருந்ததால்தான், வெகு தொலைவில் போட்டியிடாமல், அருகில் உள்ள ஆர்.கே.நகரில் போட்டியிட்டார் ஜெயலலிதா என்றும், நான் நலமோடு இருக்கிறேன். சில நாட்கள் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர், நாம் வீட்டிற்கு சென்று விடலாம் என ஜெயலலிதா செப்டம்பர் 27ஆம் தேதி கூறினார் என்றும் சசிகலா இந்தப் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்..