சினிமா உலகின் உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் அமைப்பின் தலைவர் ஜான் பெய்லி மீது பாலியல் புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.
சினிமா உலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது ஆஸ்கர் விருதுகள். இந்த விருதுகள் கூட 2 வாரங்களுக்கு முன் லாஸ் ஏஞ்சல்சில் வழங்கப்பட்டன.
இந்நிலையில்,ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அகாடெமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் அமைப்பின் தலைவராக இருக்கும் ஜான் பெய்லி மீது பாலியல் புகார்கள் கூறப்பட்டுள்ளன. இதுகுறித்து சில தகவல்களைத் தெரிவித்த ஹாலிவுட் ரிப்போர்ட்டர் மற்றும் வெரைட்டி ஊடகங்கள், வியாழக்கிழமை அன்று ஜான் பெய்லி மீது, தங்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக 3 பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதை அடுத்து இந்தப் புகார்கள் மீது விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆனால் புகார்கள் அளித்தவர்கள் பற்றிய விவரங்கள் எதுவும் தெரிவிக்கப் படவில்லை.
75 வயதான ஜான் பெய்லி, கடந்த ஆகஸ்ட் மாதம்தான் இந்த அமைப்புக்கு தலைவராகத் தேர்வு செய்யப் பட்டார். சினிமடோகிராபரான ஜான் பெய்லி இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் இந்த புகார்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், அனைத்து தகவல்களும் ரகசியமாக வைக்கப்பட்டு விசாரிக்கப் படும் என்றும், விசாரணைக்கு பின்னர் நிர்வாக குழுவிடம் அறிக்கை அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.