ஃபேஸ்புக்கில் உங்களை சாதி, மத, இன ரீதியாக வசை பாடி, வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்படுகிறவர்களை நினைத்து வருத்தம் கொள்கிறீர்களா? அல்லது வெறுமனே கடந்து போகிறீர்களா? இனி அவ்வாறு செய்யாதீர்கள்! பேஸ்புக்கில் இது குறித்து புகார் அளியுங்கள் என்கிறார்கள் சமூக ஊடகங்களை நல்ல நோக்கில் பயன்படுத்தும் வலைத்தள வாசிகள்.
பொதுவாக, சண்டை சச்சரவுகளுக்கே பேஸ்புக் பக்கத்தை பயன்படுத்தி, அதனால் மன உளைச்சல் ஏற்பட்டு பேஸ்புக் பக்கத்தை விட்டு விலகி விடலாமா என்று யோசிக்கும் முன்னர், குறிப்பிட்ட பேஸ்புக் பக்கங்களை, பயனர்களை முடக்குவதற்கான புகார்களை அளித்துவிட்டு பிறகு அது பற்றி யோசியுங்கள் என்கிறார்கள் ஆர்வலர்கள். இதற்கு ஏற்ப பேஸ்புக் நிறுவனமும் இப்போது போலி கணக்குகளை கண்டறிந்து நீக்குவதற்கு ஏஐ எனப்படும் நுட்பத்தை பயன்படுத்துகிறது. இதைத் தொடர்ந்து படியுங்கள்…
இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் 58.3 கோடி ஃபேக் ஐடி.,க்களை ‘டெலிட்’ செய்துள்ளது ‘ஃபேஸ்புக்’. எல்லாவற்றுக்கும் வன்முறையைத் தூண்டுதல், சாதி இன, அரசியல் ரீதியான தாக்குதல்களைத் தொடுத்திருப்பது ஆகியவைதான் காரணம். இப்படி, வன்முறை துண்டுதல் உள்ளிட்ட செயல்களை சுட்டிக் காட்டியதில், 86.5 கோடி பதிவுகனை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளதாம்!
சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் நிறுவனம் 86.5 கோடி பதிவுகனை நீக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும் 58.3 கோடி போலி கணக்குகளை நீக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மனிதர்களிடம் வெறுப்பு, வன்முறையைத் தூண்டுதல், மத இன ரீதியாக சண்டையை மூட்டுதல் உள்பட சமூக கொந்தளிப்புகளை ஏற்படுத்தும் வகையிலான பதிவுகளைத் தடுக்க சமூக ஊடகமான ஃபேஸ்புக் நிறுவனம் தவறிவிட்டதாக புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஃபேஸ் புக் நிறுவனம் வெளியிட்டுள்ள 86 பக்க அறிக்கையில், இந்தாண்டு முதல் மூன்று மாதங்களில், 86.5 கோடி வெறுப்பு, வன்முறையைத் தூண்டுதல், ஆபாசமான பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை நேற்று வெளியிடப்பட்ட கம்யூனிட்டி ஸ்டாண்டர்ட் அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்காகவே ஒரு தானியங்கி செயலி உருவாக்கப் பட்டுள்ளது என்றும், அது இது போன்ற தகவல்களுடன் பதிவு செய்த உடனேயே அவற்றை ப்ளாக் செய்து விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஜன.1ல் இருந்து மார்ச் 31 வரையிலான கால கட்டத்தில், ஒவ்வொரு நாளும் சராசரியாக, 65 லட்சம் போலி கணக்குகள் உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றனவாம். அவற்றைத் தடுத்துள்ளதாக பேஸ்புக் கூறியுள்ளது. இதற்கு ஏ.ஐ. எனப்படும் ஆர்ட்டிபிசியல் இண்டெலிஜன்ஸ் நுட்பம் உதவுகிறதாம்.
அதுபோல், இதுவரை ஃபேஸ்புக் நிறுவனத்தை சார்ந்து செயல்பட்டு வந்த 200 செயலிகளுக்கு அந்நிறுவனம் தற்காலிகமாக தடைவிதித்துள்ளது. ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களை திருடி தேர்தலில் சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக கேம்பிரிட்ஜ் அனாலிடிக்கா நிறுவனம் மீது புகார் எழுந்ததையடுத்து பயனர்களின் தகவல்களை பாதுகாக்க ஃபேஸ்புக் நிறுவனம் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக தகவல்களைத் திருடி தவறாக பயன்படுத்தியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் மை பர்சனாலிட்டி செயலி உள்ளிட்ட 200 செயலிகளுக்கு தற்காலிக தடை விதித்துள்ளது. விசாரணையில் உண்மை என கண்டறியப்பட்டால் செயலிகள் நிரந்தரமாக தடை செய்யப்படும் என்று ஃபேஸ்புக் நிறுவனம் எச்சரித்துள்ளது.
இப்போது பேஸ்புக் நிறுவனம், நாடுகளின் ஆட்சியாளர்களிடம் இருந்தும் பொது மக்களிடம் இருந்தும் பெறப்படும் புகார்களை வைத்து, ஒரு பொதுக் கருத்தை உருவாக்குவதில் பேஸ்புக் எவ்வளவு வலிமையுடன் திகழ்கிறது என்பது வெளிப்படுகிறது.
பேஸ்புக் போல், டிவிட்டர், யுடியூப் உள்ளிட்டவையும் தானியங்கி பாட்ஸ் மூலம் தகவல்களைப் பரப்புகின்றன. மூன்றில் இரண்டு பங்கு டிவிட்கள் பாட்ஸ் மூலம்(தானியங்கி) பரப்பப் படுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆக்ஸ்போர்ட் பல்கலை., மூலம் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், சமூக ஊடகங்களில் தானியங்கி பாட்ஸ் மூலமான அரசியல் கருத்துருவாக்கம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவாகக் கூறப்பட்டது.
பேஸ்புக், 50 கோடி போலி பயனர்களின் கணக்குகளை தடுத்திருந்தாலும், இது துல்லியமானது அல்ல என்கிறது பேஸ்புக். அதுபோல், 83.7 கோடி போலி போஸ்ட்களை ஏ.ஐ., மூலம் பேஸ்புக் தடுத்திருக்கிறதாம்!