நாளை…? ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி!

Published:

pranab mukherjee - 2026

மராட்டிய மாநிலம், நாக்பூரில் வரும் 7ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழாவில், இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். இது இந்திய அளவில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, சுதந்திரப் போராட்டத்தின் துவக்க காலத்தில் காங்கிரஸின் இளையோர் சேவா அமைப்பின் அடிப்படையில் துவக்கப்பட்டதுதான்! ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் துவக்கிய டாக்டர் ஹெட்கேவார், சுதந்திரப் போராட்ட காலத்தில், காங்கிரஸ் மாநாடுகளில் பங்கு பெறும் தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் உதவி செய்கின்ற இளையோர் பட்டாளத்தை நிர்வகித்து வந்தவர். அதன் பின்னணியில் தான் 1925ல் நாட்டுக்கு தனித்துவத்துடன் சேவை புரியும் ராஷ்டீரிய ஸ்வயம்சேவக் சங் என்பதைத் துவக்கினார். அதாவது நாட்டுக்கு சேவை செய்யும் தன்னார்வ அமைப்பு என்ற பொருளில்!

காந்தியும் இன்னும் பல சுதந்திரப் போராட்டத் தலைவர்களும் ஆர்.எஸ்.எஸ். முகாம்களில் பங்கு கொண்டு தங்கள் ஆச்சரியத்தையும் ஆசியையும் தெரிவித்துள்ளனர். .இருப்பினும், பின்னர் வந்த நேரு, இந்த அமைப்பின் வளர்ச்சியினால் தங்கள் குடும்ப வளர்ச்சி பாதிக்கப் படும் என்பதைக் கருத்தில் கொண்டு, ஆர்.எஸ்.எஸ்.,க்கு எதிரான மோசமான பிரசாரத்தைக் கையாண்டு, மகாத்மா காந்தி கொலை நேரத்தில் பொய்க் குற்றச்சாட்டுகளை நிரப்பி, ஆர்.எஸ்.எஸ்.,க்கு தடை விதித்தார். ஆனால் நீதிமன்றங்களின் மூலம் தங்களது நியாயங்களை நிரூபித்து ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மீண்டும் முன்னிலும் உத்வேகத்துடன் செயலாற்றத் தொடங்கியது. இன்றும், நேருவின் அதே கொள்கைகளை முன்வைத்துக் கொண்டு, அவ்வப்போது ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸார் பொய்க் குற்றச்சாட்டுகளை வாய்க்கு வந்தபடி அவிழ்த்து விடுவது வழக்கமாகிவிட்டது.

pranab mukharji - 2026

இத்தகையை பின்னணியில்தான், காங்கிரஸைச் சேர்ந்தவராக இருந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, இந்த ஆர்.எஸ்.எஸ். முகாமில் கலந்து கொள்கிறார். இதற்கு எதிர்ப்புகள் இல்லாமல் இல்லை… அவற்றின் சிறு தொகுப்பு:

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பாரதீய ஜனதா கட்சியும் வெறுப்புணர்வு கொள்கையை பின்பற்றுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிற நேரத்தில், அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுவது, அந்த கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சங்கடமான நிலையையும் ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து இருவிதமான பதில் எழுந்து உள்ளது. ஒருதரப்பு மவுனம் காக்கிறது. மற்றொரு தரப்பு பிரணாப் முகர்ஜி அழைப்பை ஏற்க கூடாது, நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள கூடாது என வலியுறுத்துகிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பிரணாப் முகர்ஜிக்கு எழுதியுள்ள கடிதத்தில், கூட்டத்தில் கலந்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொண்டு உள்ளனர். பிரணாப் முகர்ஜிக்கு காங்கிரஸ் தலைவர் ப சிதம்பரமும் அறிவுரையை வழங்கியிருந்தார். ஆர்.எஸ்.எஸ். அழைப்பை பிரணாப் முகர்ஜி ஏற்றுக்கொண்ட நிலையில், “ நீங்கள் அவர்களுடைய அழைப்பை ஏற்றுக்கொண்டீர்கள், தயவுசெய்து அங்கு செல்லுங்கள், அவர்களுடையை கொள்கையில் உள்ள தவறை எடுத்துரையுங்கள்,” என்று சிதம்பரம் குறிப்பிட்டு இருந்தார்.

pranab mukarji - 2026

பிரணாப் முகர்ஜி தனது முடிவை பரிசீலிக்க வேண்டுமென ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பலர் கேட்டுக் கொண்டனர். அதே முயற்சியில், கட்சியின் இதர தலைவர்களான ரமேஷ் சென்னிதலா, முன்னாள் மத்திய அமைச்சர் சி.கே.ஜாஃபர் ஷெரீஃப், மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் அதிர் செüதரி ஆகியோரும் ஈடுபட்டனர். எனினும், பிரணாப் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

இவ்விவகாரத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து உள்ள நிலையில் பிரணாப் முகர்ஜியோ, அங்கே என்ன பேச வேண்டுமோ, அதனை நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் நான் பேசுவேன் என கூறியுள்ளார்.

பெங்காலி செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதங்கள் வருவதை ஒப்புக்கொண்டு உள்ளார். மேலும், “நான் என்ன பேச வேண்டுமோ, அதனை நாக்பூரில் பேசுவேன். எனக்கு பல்வேறு கடிதங்கள் வந்து உள்ளது, தொலைபேசி அழைப்புக்கள் வந்து உள்ளது, ஆனால் அவைகளுக்கு இதுவரையில் பதிலளிக்கவில்லை,” என கூறிஉள்ளார் பிரணாப் முகர்ஜி. இப்படி, ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் என்ன பேச வேண்டும் என்பதை நானே தீர்மானிப்பேன்! அடுத்தவர்கள் இல்லை.. என்று பிரணாப் முகர்ஜி உறுதிபடத் தெரிவித்தார்.

முன்னதாக, தங்களது அழைப்பை பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டது, எதிர் அணியாக இருந்தாலும் முக்கியமான விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம் என்பதையும், எதிராளிகள் எதிரியாக இருக்க வேண்டியதில்லை என்பதையும் பிரதிபலிக்கும் வகையில் இருப்பதாக ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் ராகேஷ் சின்ஹா கூறியிருந்தார்.

இருப்பினும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சியில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்பதில் தவறில்லை என்று காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியபோது, பிரணாப் முகர்ஜி மதச்சார்பற்ற நபர் ஆவார். ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும், அங்கு அவர் தனது மதச்சார்பற்ற கருத்தையே முன்வைப்பார். அவர் நல்ல சிந்தனையாளர். அவர் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு செல்வதும், அங்கு பேச இருப்பதும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். ஆர்எஸ்எஸ் அழைப்பை பிரணாப் முகர்ஜி ஏற்றதில் தவறில்லை. அவரது பேச்சினால், ஆர்எஸ்எஸ் அமைப்பில் ஏதேனும் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டால், அதனால் மகிழ்ச்சிதான் என்றார் சுஷில் குமார் ஷிண்டே.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

இருப்பினும், நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்த போதும், மேற்கு வங்காளத்தில் நடைபெறும் துர்கா பூஜை உத்ஸவங்களை, தனது குடும்பத்தினருடன் வெளிப்படையாக, ஆன்மிக உணர்வுடன் பிரணாப் முகர்ஜி கொண்டாடுவது தம்மை வெகுவாகக் கவர்ந்து விட்டது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அவரிடம் நேரடியாகக் குறிப்பிட்டார். அது முதல், பிரணாப்புடன் நெருக்கத்தை வளர்த்துக் கொண்டார் மோகன் பாகவத். இந்தப் பின்னணியிலேயே ஆர்.எஸ்.எஸ்.ஸின் நிகழ்ச்சிக்கு பிரணாப்பை அவர் அழைத்ததாகக் கூறப்பட்டது. நாளை என்ன நடக்கப் போகிறது என்பதை இந்தியா முழுதும் கவனித்துக் கொண்டிருக்கிறது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img