
— ராம் மாதவ் —
தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார்
கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பிரியங் கார்கே ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கு எழுதிய கடிதம் ஊடகங்களில் முக்கிய செய்தியானது. எந்த இந்திய சட்டத்தின்படி ஆர் எஸ் எஸ் செயல்படுகிறது, அதன் சட்டபூர்வமான நிலை என்ன, பதிவு செய்யப்பட்டுள்ளதா, நிர்வாகிகள் யார், நிதி எப்படி வருகிறது, எந்த வகையில் செலவு செய்யப்படுகிறது, வரி கட்டப்படுகிறதா, அதன் செயல்பாடுகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளதா, இதையெல்லாம் ஆர்எஸ்எஸ் விளக்க வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.
எதிர்பார்த்தபடியே, கார்கேவின் கடிதத்திற்கு பாகவத் ‘அரசியல் உள்நோக்கம் கொண்டது’ என்று கூறி அதற்கு பதில் அளிக்க மறுத்துள்ளார். ‘இது அரசியல். இதுபோன்ற கூத்துக்களை ஏற்கனவே முயற்சித்துள்ளார்கள். எங்களுக்கு இது பழகிப்போன விஷயம்’ , என்று கூறியுள்ளார்.
அதன் பிறகு கார்கே ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், ஆர்எஸ்எஸ் இந்த மண்ணின் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டுமென்று தாம் கேட்பதாக, வலியுறுத்தி பேசியுள்ளார். நேர்காணல் செய்தவர் ‘ஆர்எஸ்எஸ் எந்த சட்டத்தை மீறி இருக்கிறது’ என்று கேட்டதற்கு அவரிடம் பதில் இல்லை. எந்த சட்டத்தின் படி ஆர்எஸ்எஸ் செயல்படுகிறது என்று தனக்குத் தெரியவில்லை என்று உளறி இருக்கிறார்.
‘ எல்லா குடிமக்களுக்கும் அமைப்பு அல்லது சங்கம் அல்லது கூட்டுறவு சங்கம் அமைப்பதற்கு உரிமை உள்ளது’ என்று இந்திய அரசமைப்பு சட்டப்பிரிவு 19 (1)(இ) தெளிவாக கூறுகிறது. இந்த சட்டமே ஆர் எஸ் எஸ் நாடு முழுக்கவும் தனது செயல்பாடுகளை சுதந்திரமாக நடத்த உரிமை வழங்கி உள்ளது. இது போன்ற அமைப்புகள் பதிவு செய்வது கட்டாயம் என்று அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தவில்லை. அரசிடம் இருந்து நிதி உதவி பெறும் அமைப்புகள் அல்லது வர்த்தக செயல்பாடுகள் கொண்ட அமைப்புகள் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என்று சட்டம் கூறுகிறது. இதுவும் ஆர்எஸ்எஸ் க்கு பொருந்தாது.
ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது. காந்தி கொலையுடன் இணைத்து தவறாக குற்றம் சாட்டப்பட்டு தடை செய்யப்பட்டபோது ஜவஹர்லால் நேருவின் அரசு ஆர் எஸ் எஸ் அமைப்பு சாசனத்தை தருமாறு கேட்டது . அந்த இயக்கம் அதை காட்டியது. இது நடந்தது 1949 இல். அதை ஏற்றுக் கொண்ட நேருவின் அரசு தடையை நீக்கியது. இது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் செயல்பாடுகள் மட்டுமன்றி நிதி திரட்டும் முறைமையையும் அரசு ஏற்றுக் கொண்டது என்பதையே காட்டுகிறது.
அரசுக்கு சமர்ப்பித்த சாசனத்தின்படி ஆர் எஸ் எஸ் அதன் பிறகு இந்த நாட்டில் தொடர்ந்து செயல்படுகிறது. அதன் உறுப்பினர்கள் நேருவின் அரசில் 1963 இல் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டனர். 1965 இல் (இந்திய- பாகிஸ்தான்) யுத்தத்தின் போது பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ஆர் எஸ் எஸ் தலைவர் எம் எஸ் கோல்வல்கரின் ஆலோசனையை கேட்டு பெற்றார். 1973 இல் கோல்வல்கர் காலமான போது பிரதமர் இந்திரா காந்தி நாடாளுமன்றத்தில் பேசிய இரங்கல் உரையில், குரு கோல்வல்கர் என்ற புகழ் மிக்க ஆளுமையை நாம் இழந்து உள்ளோம். அவர் இந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இல்லாத போதிலும் தனது ஆளுமையாலும் இலட்சிய பற்றாலும் இந்த தேசத்தில் உயர்வாக மதிக்கப்பட்டார், என்று குறிப்பிட்டுள்ளார். மேற்கண்ட தலைவர்கள் யாரும் ஆர்எஸ்எஸ் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று எப்போதும் கேட்டதில்லை.
வருமான வரி சட்டம் 1961 தின்படி ‘தனி மனிதர்களின் அமைப்பு’ என்று ஆர் எஸ் எஸ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கம்பெனியாகவோ பொது ட்ரஸ்ட் ஆகவோ அல்லது பதிவு செய்யப்பட்ட சொசைட்டியாகவோ அல்ல. தனி நபர்களின் அமைப்பு என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பு சாசனத்தில் நிதி திரட்டும் முறை விளக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ‘வியாச பௌர்ணமி’ அல்லது அதை ஒட்டி வரும் புனித நாள் ஒன்றில் ஒவ்வொரு கிளையிலும் ‘ தட்சணை தினம்’ கொண்டாடப்படும். அப்போது தன்னார்வத்துடன் அளிக்கப்படும் நிதி பெறப்படும். அவ்வாறு பெறப்படும் நிதி ஆடிட்டர் மூலம் ஆய்வு செய்யப்படும். குரு தட்சணை எனப்படும் தன்னார்வ முறையில் நிதி திரட்டுவது ‘பரஸ்பரம்’ என்ற வருமான வரி சட்டப் பிரிவில் அடங்கும்.
சில தனிநபர்கள் சேர்ந்து குழுவாக வர்த்தக நோக்கம் இல்லாமல் பொது காரியத்திற்காக நிதி திரட்டுவது பரஸ்பரம் என்ற வகையில் வரும். அவ்வாறு திரட்டப்படும் நிதிக்கு வரிவிதிப்பு கிடையாது. இந்த அடிப்படையில்தான் நேரடி வரிக்கான மத்திய ஆணையம் சுயம்சேவகர்களிடமிருந்து குரு தட்சிணையாக பெறப்படும் நிதி பரஸ்பரம் என்ற வகையில் திரட்டப்படுவதால் அதற்கு வரி விதிக்க முடியாது, என்று கூறியுள்ளது.
1994 ல் பாட்னா உயர்நீதி மன்றம் இது தொடர்பான வழக்கில் மேற்படி வருமான வரித்துறையின் ஆணையை சுட்டிக்காட்டி, உறுப்பினர்களிடமிருந்து குரு தட்சணை என்ற வகையில் பெறப்படும் நிதிக்கு வருமான வரிவிலக்கு அளிக்கப்பட வேண்டுமா? என்று கேட்டால், ஆம் வரிவிதிப்பு கூடாது , என்று ஆர் எஸ் எஸ் க்கு ஆதரவாக தீர்ப்பு கூறியுள்ளது.

மத அமைப்புகள் பலவும் வேறு பல அமைப்புகளும் பதிவு செய்யப்படாமல் அதேவேளையில் சுதந்திரமாக இந்த நாட்டில் செயல்பட்டு வருகின்றன. ஆர் எஸ் எஸ் ஐ பொறுத்த வரையில், ‘தனி நபர்களின் அமைப்பு’ என்ற முக்கியமான அம்சத்தை தவிர மற்ற எல்லா வகையிலும் — அதன் அசையா சொத்துக்கள், பள்ளிகள், சகோதர அமைப்புகள் — எல்லாம் முறையாக சொசைட்டி, டிரஸ்ட் என்று பதிவு செய்யப்பட்டு விதிமுறைகளுக்கு ஏற்பவே செயல்படுகின்றன.
1925 ல் ஆர் எஸ் எஸ் துவங்கப்பட்ட போது ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்பது அதன் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. எனவே அந்நிய அரசிடம் பதிவு செய்வது என்ற கேள்வியே எழவில்லை. சுதந்திரத்திற்கு பிறகு பதிவு செய்யப்படாத அமைப்பாக இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவது என்ற நிலையை மேற்கொண்டது. இதை இதுவரை இருந்துள்ள அரசுகள் ஏற்று வந்துள்ளன. இன்று யாரோ ஒருவர் இது பற்றி கேள்வி எழுப்பினால் அவர் அறியாமையில் அரசியல் லாபத்திற்காக கேட்பதாகவே கருதப்படும்.
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்
கட்டுரையாளர், தில்லியில் உள்ள இந்தியா பவுண்டேசனின் தலைவராக இருக்கிறார்.



