கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

Published:

hrnce commissioner office chennai - 2026

இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் சிலர் கோவிலை சுரண்டும் ஊழல் பெருச்சாளிகளாக உள்ளனர் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கை :

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இராமேஸ்வரம் திருக்கோவிலில் லட்டு பிரசாதம் முறைகேட்டில் அதிகாரிகள் துணையோடு ஊழியர்கள் பல கோடி ரூபாய் சுருட்டிய அதிர்ச்சி செய்தி வெளி வந்துள்ளது.

நேற்று (21.5.26) திருச்செந்தூர் கோவிலில் தரிசன கட்டண ரசீது முறைகேட்டில் 25 லட்சம் ரூபாய் திருடிய பெண் அதிகாரி பிடிபட்டுள்ளார்.

தப்பு செய்தால் இறைவன் தண்டிப்பான் என்ற நம்பிக்கை மக்களுக்கு இன்றும் முழுமையாக உள்ளது. ஆனால் கோவிலில் இறைவன் முன்பே மனசாட்சி இல்லாமல் பக்தர்களை ஏமாற்றி திருடும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளின் செயல் வெட்கக்கெடானது.

திருத்தணியில் ஒரு பெண் அதிகாரி மோசடியில் ஈடுபட்டபோது கட்டப்பஞ்சாயத்து செய்து அவரை காப்பாற்றியது கடந்த திமுக அரசு.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

அதுபோல திருவண்ணாமலை, ஶ்ரீ ரங்கம் கோவில்களில் விசேஷ நாட்களில் போலி சிறப்பு தரிசன கட்டணக் கொள்ளை பற்றிய செய்திகள் சமூக ஊடகங்களில் வீடியோவாக வெளிவந்தும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மக்களின் நம்பிக்கையை, அவசரத்தை பயன்படுத்தி முறைகேடாக பல கோடி ரூபாய் சுட்டுகிறார்கள் அதிகாரிகள். ஏதோ ஒரிரு அதிகாரிகள் மட்டும் குற்றவாளி என சித்தரிப்பது, பிரச்சினையை பெரிதாகாமல் மூடி மறைக்கவே.

கோவில் உண்டியல் காணிக்கை முதல் பிரசாத வினியோகம் என ஊழல் பலவிதங்களில் நடக்கிறது. இதற்கு பின்புலத்தில் பல நெட்வொர்க் ஆட்கள் இருக்கிறார்கள்.

முழுமையாக இந்த முறைகேடுகளுக்கு சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை பாய வேண்டும்.

அன்னதானம் பெரும் புண்ணியம். இந்த நற்பணி பக்தர்களின் காணிக்கையால் நடந்து வருகிறது. ஆனால் அதிலும் தரமில்லை என ஏராளமான புகார்கள் வருகின்றன. இதிலும் எண்ணற்ற முறைகேடுகளும் நடக்கின்றன.

எனவே புதிதாக பொறுப்பேற்றிருகும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி மற்றும் அமைச்சர், உடனடியாக கடந்த ஐந்தாண்டுகளில் இந்த துறையில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

ALSO READ:  அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி...!

குற்றச் செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சம்பந்தமான முழுமையான வெள்ளை அறிக்கையை விரைவாக தயாரித்து பக்தர்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Related articles

Recent articles

spot_img