‘அக்ரனி ‘ ( முன்னோடி ) எனப் பெயரிடப்பட்ட அந்த மராத்தி தினசரி, 1944 ஆம் ஆண்டு மார்ச் 28ந் தேதி,யுகாதியன்று வெளிவரத் துவங்கியது. அதன் முதற் பக்கத்தில் சாவர்க்கரின் படமும்,சமஸ்கிருதத்தில் பத்திரிகையின் முக்கிய நோக்கத்தை குறிக்கும் வாசகமும் இடம் பெற்றிருந்தது.
‘ மக்கள் நலன்,வெறும் புகழ் அல்ல ‘ என்பதே அந்த வாசகத்தின் பொருள். நாதுராம் கோட்ஸே பத்திரிகையின் ஆசிரியர், நாராயண் ஆப்தே அதன் மேலாளர்.
ஆப்தே இன்னும் ராணுவப் பணியில் இருந்தார், ராணுவச் சீருடையும் அணிந்துக் கொண்டிருந்தார். தொடக்கம் முதலே அந்த தினசரி பல பிரச்சனைகளை சந்தித்தது.
போர்க் காலம் ஆகையால், பொருட்களின் தட்டுப்பாடு, அச்சடிக்கத் தேவைப்பட்ட காகிதத்திற்கு கட்டுப்பாடு, பத்திரிகை தணிக்கை, சி.ஐ.டி. கண்காணிப்பு, அனைத்திற்கும் மேலாக பணத் தட்டுப்பாடு.
ஆனால் ஆசிரியரும், மேலாளரும், பக்தி சிரத்தையுடன் கடுமையாக உழைத்தனர். கடினச் சூழ்நிலைகள், இருவரையும் நெருக்கமாகக் கொண்டு வந்தது என்று சொல்லலாம். இருவரும் பரஸ்பரம்,தங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொண்டு செயல்பட்டனர்.நண்பர்களிடம் கடன் வாங்கினார்கள்,வட்டிக்குக் கடன் வாங்கினார்கள்…
பத்திரிகை தொடர்ந்து வெளி வந்துக் கொண்டிருந்தது..! தொடக்கத்தில், இந்திய தேசிய காங்கிரஸுக்கும், ஹிந்து மகா சபாவிற்கும் உணர்வுகளில் பெரிய வித்தியாசம் இருக்கவில்லை.
இருவரும் சுவராஜ்யம் வேண்டும் என்றே எண்ணினர்,இருவரும் நாடு பிளவுப்படக்கூடாது என்றே எண்ணினர். ஓரே வித்தியாசம், நாடு பிளவு படாமல் இருப்பதற்காக, முஸ்லீம்களுக்கு ஏராளமான சலுகைகள் அளிப்பதற்கு காங்கிரஸ் தயாராக இருந்தது.
ஆனால்.. ஹிந்து மகா சபா இத்தகையச் சலுகைகள் அளிப்பதை கடுமையாக எதிர்த்தது.
காந்தி மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே இருந்தார், ‘’ என்னை துண்டாடி விட்டு நாட்டை துண்டாடுங்கள் ‘’. நேருவும், பிற காங்கிரஸ் தலைவர்களும் கூட இதே உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். ஆனால் இந்த நோக்கில் உறுதியாக நில்லாமல், முஸ்லீம் லீக்கும், அதன் தலைவர் ஜின்னாவும் தந்த அழுத்தத்திற்கு அடி பணிந்தனர்.
ஆனால் சாவர்க்கரும் அவருடைய தொண்டர்களும், இறுதி வரை, பாரதம் துண்டாடப்படுவதை உறுதியாக எதிர்த்தார்கள்.. உண்மையை நியாய உணர்வோடு கூற வேண்டுமானால், காங்கிரஸிலேயே கூட பெரும்பாலும் தொண்டர்கள், தேசப்பிரிவினையை எதிர்த்தனர்.
ஆனால்…
முதுகெலும்பில்லாத, கையாலாகாத தலைவர்களின் காரணமாக நாடு துண்டாடப்பட்டது. 1947 மார்ச் வரை கூட காந்தி பிரிவினையை ஆதரிக்க வில்லை. பிரிவினை என்பது என் பிணத்தின் மீதுதான், நான் உயிரோடு இருக்கும் வரை, பிரிவினையை அனுமதிக்க மாட்டேன் என்றார்.
ஆனால், நாடு அவர் கண் முன்னே, அவர் உயிரோடு இருக்கும் போதே, அவருடைய ஒப்புதலோடு, துண்டாடப்பட்டது.
( தொடரும் )
– எழுத்து: யா.சு.கண்ணன்