புது தில்லி : மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதால் அது தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உடல்நலக் குறைவு காரணமாக 75 நாட்கள் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, டிசம்பர் 5 ம் தேதி காலமானார். இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல சந்தேகங்களும், சர்ச்சைகளும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது.
இந்நிலையில், தற்போது சென்னையைச் சேர்ந்த ஒருவர், உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். மேலும், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த அனைத்து விவரங்களையும் அறிக்கையாக சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



