கேரளத்தில் பெண்கள் பலருடன் தொடர்பு வைத்திருந்த கணவனின் அழகு முகத்தை அமிலம் ஊற்றி அலங்கோலமாக்க நினைத்த மனைவி, அவரது கணவன் எதிர்பாராதவிதமாக உயிரிழந்ததால் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் போத்தன்சேரியை சேர்ந்தவர் பஷீர். இவரது மனைவி சுபைதா. இரண்டு வாரங்களுக்கு முன் நள்ளிரவில் இவர்களது வீட்டில் புகுந்த மர்ம நபர், பஷீரின் முகத்தில் அமிலத்தை ஊற்றி விட்டு தப்பி ஓடி விட்டார் என்று புகார் தெரிவிக்கப் பட்டது. இந்தச் சம்பவத்தில், பஷீரின் முகம் சிதைந்து கோரமானது.
பஷீர் உடனே அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் உதவியுடன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் பஷீர் சேர்க்கப் பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி சிகிச்சை பலனின்றி பஷீர் உயிரிழந்தார். இதனால் அமிலம் வீசிய மர்ம நபர் குறித்து பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரித்தனர். ஆனால் விசாரணையின் போது, பஷீரின் மனைவி சுபைதா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதை அடுத்து போலீசார் சுபைதாவிடம் நடத்திய தீவிர விசாரணையில், அவர் பல அதிர்ச்சிகரமான தகவல்களைக் கூறியுள்ளார்.
என் கணவருக்கு பெண்கள் பலருடன் தொடர்பு இருந்தது. இதனை நான் தட்டிக்கேட்டேன். ஆனால் அவர் அதைக் கண்டு கொள்ளவே இல்லை. பெண்கள் பலருடன் இவ்வாறு அவர் நடந்து கொள்வதற்கு அவரது முக அழகுதான் காரணம் என்று நினைத்தேன். எனவே அவரது முகத்தை சிதைத்தால் வேறு எந்தப் பெண்ணும் எனது கணவரை ஏறெடுத்தும் பார்க்க மாட்டாள் என்று நினைத்த நான், அவரது முகத்தில் அமிலத்தை ஊற்றினேன். அவரது முகத்தை கோரமாக்க வேண்டும் என்பது மட்டுமே என் நோக்கம். ஆனால் அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்து விட்டார்… என்று கூறினார்.
இதனால் போலீசார் சுபைதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.