ஆழப்புழ: ஆழப்புழ மாவட்டத்தில் பள்ளிப்பாடு பகுதியில் உள்ள பள்ளியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கே 23 ஹரிஜன குடும்பங்களைச் சேர்ந்த 56 பேர் இருந்துள்ளனர். அவர்கள் ஹரிஜன சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுடன் தங்க முடியாது என மீதமுள்ள குறிபிட்ட மத குடும்பத்தினர் அங்கே தங்க மறுத்தனர்.
இதை அடுத்து, தாசில்தார் மாற்று ஏற்பாடு செய்ததால், அவர்கள் வேறு இடத்திற்கு மாறி சென்றுள்ளனர்! இதுகுறித்த செய்தி வெளியானதும், மாவட்ட
ஆட்சியர் சுஹாஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுஹாஸ், தாசில்தார் கார்த்திகபள்ளி மற்றும் மாவட்ட காவல்துறை அதிகாரி இருவரையும் இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப் பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
அந்த 23 ஹரிஜன குடும்பங்களைச் சேர்ந்த 56 பேர் அனைத்து கேரள புலையர் மகாசபா மூலம் முதல்வர் பிணரயி விஜயனுக்கு, மாவட்ட ஆட்சியருக்கும் ஒரு புகார் அனுப்பினர். அதில், அஞ்சிமூடு எல்.பி. பள்ளியில் செயல்பட்ட நிவாரண முகாமில் கிறிஸ்துவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று முரண்டு பிடித்ததாகக் கூறியுள்ளனர்.
அந்தக் குடும்பங்களில் ஒருவரான டினு விஜயன், இந்தச் சம்ப்வம் குறித்து கூறிய போது, கிறிஸ்துவ சமூகத்தைச் சேர்ந்த 27குடும்பங்கள் அங்கே வந்தனர். அவர்கள் சனிக்கிழமை அன்று, தலித் சமூகத்தவரால் சேர்ந்து தயாரிக்கப் படும் உணவை ஏற்க மாட்டோம் எனக் கூறினர். மேலும், தலித் சமூகத்தவருடன் இடத்தைப் பகிர்ந்து கொள்ள மாட்டோம், உடன் தங்க மாட்டோம் என்று கூறி, வேறு இடம் கேட்டனர். அதன்படி, அவர்கள் வேறு முகாமுக்கு மாற்றப் பட்டனர்.
நாங்கள் ஜூலை 18 ஆம் ஏற்பட்ட வெள்ளத்தை அடுத்து இந்த நிவாரண முகாமுக்கு வந்தோம். அச்சங்கோவில் ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு எங்கள் வீடுகள் மூழ்கின.. இந்த முகாமில் 23 தலித் குடும்பங்களும் 28 கிறிஸ்துவ குடும்பங்களும் தங்க வந்தோம். அப்போது கிறிஸ்துவ குடும்பத்தினர், எங்களிடம் தாங்களே தனியாக உணவு சமைத்து உண்பதாகவும், உணவுப் பொருள்களை மட்டும் தனியாகக் கொடுத்துவிடும் படியும் கூறினர். ஆனால், ஒரு முகாமுக்கு கொடுக்கப்படும் உணவுப் பொருள்களை தனித்தனியாகப் பிரிப்பது சரியல்ல என்று நாங்கள் கூறினோம். ஆனால் அவர்கள் போலீஸில், நாங்கள் அவர்கள் குடும்பத்துப் பெண்களிடம் தவறாக நடப்பதாக புகார் தெரிவித்தனர்.
அவர்கள் கேட்டுக் கொண்டதை அடுத்து வேறு முகாமுக்கு சனிக்கிழமை முதல் மாற்றப் பட்டனர். இது எங்கள் சமூகத்துக்கு கொடுக்கப் பட்ட மிகப் பெரிய அவமதிப்பு.. என்று கூறினார்.
ஆனால், கிறிஸ்துவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிடுகையில், “அந்தப் பள்ளி முகாமில் தங்கியிருந்த எங்கள் சமூகப் பெண்களை அவர்கள் வீடியோ எடுத்தார்கள். நாங்கள் கேள்வி கேட்டோம். சண்டை ஏற்பட்டது. அதனால் வேறு முகாமுக்கு மாறினோம்” என்று கூறினார்.
இந்தப் பிரச்னை இப்போது பெரிதான நிலையில், ஹிந்து ஐக்ய வேதி உறுப்பினர்கள், அந்த அமைப்பின் துணைத் தலைவர் ஷ்ரேயஸ் எஸ். நம்பூதிரி தலைமையில் முகாமுக்குச் சென்று பார்வையிட்டு தலித் குடும்பத்தினருடன் சேர்ந்து முகாம் உணவை ஏற்க மறுத்ததற்காக போராட்டம் நடத்தினார்.
இந்த விவகாரம் கேரளத்தில் இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.