தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வருவதால் ராகுல் பிரசாரத்தை காங்கிரஸ் வேட்பாளர்களே விரும்புவதில்லை என யோகி ஆதித்யநாத் விமர்சித்தார்.
பிகானேர்: ராகுல்காந்தி என்றாலே தோல்வியை உறுதி செய்பவர் என்று ஆகிவிட்டது என்று உபி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
ராஜஸ்தானில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் அங்கு பாஜக., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்து வருகிறார். அப்போது சுரு மாவட்டத்தில் உள்ள ரதன்கர் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியபோது ராகுலை கடுமையாக கேலி செய்தார்.
யோகி ஆதித்யநாத் தனது பிரசாரத்தில் பேசியவை…
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல், எங்கெல்லாம் தனது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யச் செல்கிறாரோ, அங்கெல்லாம் காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வியை மட்டுமே தழுவியுள்ளனர். எனவே தங்கள் தொகுதியில் எந்தவொரு காங்கிரஸ் கட்சி வேட்பாளரும், தங்கள் சொந்தக் கட்சியின் தலைவரான ராகுல் பிரசாரம் செய்வதை விரும்புவதில்லை.
எங்கெல்லாம் ராகுல் செல்கிறாரோ அங்கெல்லாம் அவர் தோல்வியை உறுதி செய்கிறார். ராகுல் என்றாலே தோல்விதான்! காங்கிரஸ் கட்சியிடம் இருந்து எதையும் எதிர்பார்க்க முடியாது. அக்கட்சிக்கு சரியான தலைமை கிடையாது என்று பேசினார்.
மேலும், பாஜக.,மத்தியிலோ அல்லது மாநிலத்திலோ எங்கு ஆட்சியில் இருந்தாலும், அங்கே பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே வளர்ச்சி நடவடிக்கைகள் எடுப்பதில் பாஜக-வுக்கு மாற்று கிடையாது.
தற்போது பாஜக வந்த பிறகு உத்தரப் பிரதேசம் மிகப் பெரிய வளர்ச்சியையும் மாற்றத்தையும் கண்டுள்ளது நன்றாக வெளித் தெரிகிறது. ராஜஸ்தானில் ராஜே அரசும் மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்து வருகிறது. 3.5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சி நடவடிக்கைகளால் மேலும் பல வேலைவாய்ப்புகள், பணிகள் தொடர்பான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. எனவே பாஜக.வுக்கு வாக்களியுங்கள் என்று வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டார் யோகி ஆதித்யநாத்.
இந்தத் தொகுதியில் 2.47 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இங்கே மும்முனைப் போட்டி நடக்கிறது. முன்னாள் பாஜக.,வுக்கு போட்டியாக முன்னாள் அமைச்சர் ராஜ்குமார் ரின்வா சுயேட்சையாக போட்டியிடுகிறார். ராஜஸ்தானில் பாஜக., 11 தலைவர்களை கட்சியில் இருந்து நீக்கியது. அவர்களில் ரின்வாவும் ஒருவர். ராஜஸ்தானில் டிசம்பர் 7ம் தேதி தேர்தல் நடக்கிறது.