சென்னை: தமிழக சட்டசபையில் கடந்த கூட்டத் தொடரின் போது அமளியில் ஈடுபட்டதாகக் கூறி சஸ்பென்ட் செய்யப்பட்ட 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் மேலும் 10 நாட்கள் கூட்டத் தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தன. சட்டசபையில் பிப்.19-ந் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், அமளி ஏற்பட்டது. அப்போது தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் அவைத்தலைவர் இருக்கையை நோக்கி வேகமாகச் சென்றனர். அவர்களை அவைக் காவலர்கள் தடுத்தபோது இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து சபாநாயகரையும் சபை காவலரையும் தாக்க முயன்றதாக தே.மு.தி.க. எம்.எல்.ஏக்களான மோகன்ராஜ், வி.சி.சந்திரகுமார், கே.தினகரன், சி.எச்.சேகர், எஸ்.ஆர்.பார்த்திபன், எல்.வெங்கடேசன் ஆகியோர் அந்தக் கூட்டத் தொடர் மற்றும் தற்போதைய கூட்டத் தொடரில் பங்கேற்க தடை விதிக்ப்பட்டதுடன் இப்பிரசனை உரிமைக் குழுவுக்கு அனுப்பப் பட்டது. உரிமைக் குழு ஆராய்ந்து எடுத்த முடிவை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தது. இதனிடையே தற்போதைய கூட்டத் தொடரில் தங்களை அனுமதிக்கக் கோரி நடவடிக்கைக்கு உள்ளான உறுப்பினர்கள் சட்டசபை வளாகத்திலேயே தர்ணா போராட்டமும் நடத்தினர். இந்நிலையில் சட்டசபையில் உரிமைக் குழு முடிவை சபை முன்னவரான அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவித்தார். அதன்படி, தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் 6 பேரும் சட்டசபை கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்கு மேலும் 10 நாட்கள் தடை விதிக்கப்படுகிறது; இது அடுத்த கூட்டத் தொடருக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த முடிவு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த முடிவுக்கு சட்டசபையில் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் இடதுசாரி எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் மேலும் 10 நாட்கள் சஸ்பென்ட்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

