பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

Published:

annamalai bjp tn leader - 2026

தமிழக பாஜக.,வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தாம் அந்தக் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தாம் பார்த்து வந்த ஐபிஎஸ் பணியைத் துறந்து, வீ த லீடர்ஸ் என்ற அமைப்பைத் தொடங்கினார் அண்ணாமலை. அதன் பின் தாம் அரசியலில் ஈடுபடப் போவதாகக் கூறினார். தாம் பாரதப் பிரதமர் மோடி மீது கொண்ட மதிப்பு மற்றும் பற்றின் காரணமாக தாம் பாஜக.வில் இணையப் போவதாகக் கூறினார். 

2020 ஆகஸ்ட் 25 அன்று, தில்லியில் தேசியத் தலைவர்கள் முன்னிலையில், அவர் பாஜக.,வில் தன்னை இணைத்துக் கொண்டார். அவர் பாஜக.,வில் சேர்ந்த ஒரு வாரத்துக்குள், அவர் பாஜக., தமிழக துணைத் தலைவராக நியமிக்கப் பட்டார். 

ஜூலை 2021ல் அவர் பாஜக.,வின் தமிழக மாநிலத் தலைவராக நியமிக்கப் பட்டார். அதன் பின் பாஜக.,வில் அவரது அரசியல் பயணம் உச்சத்தை அடைந்தது. 

ஜூலை 2023 முதல் பிப்ரவரி 2024 வரை அவர் தமிழகம் முழுதும் மேற்கொண்ட என் மண் என் மக்கள் பாத யாத்திரை அவருக்கு பெரும் மக்கள் செல்வாக்கைப் பெற்றுத் தந்தது. அவரது யாத்திரைகளில் பாரதப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் பங்கேற்று உற்சாகப் படுத்தி ஆதரவளித்தனர். 

 2024ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

ஏப்ரல் 2025ல் அடுத்து வரப் போகும் தேர்தல்களை முன்னிட்டு, அவர் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். எனினும் அவர் தேசியப் பொதுக்குழுவில் உறுப்பினர் ஆக்கப்பட்டார். 

அதன் பின் அடுத்த ஒரு வருடத்தில் பாஜக.,வில் இருந்து வெளியேறி, தாம் ஏற்கெனவே தொடங்கி தொடர்ந்து நடத்தி வந்த ‘வீ த லீடர்ஸ்’ என்ற அமைப்புக்கு மீண்டும் புத்துயிரூட்டி, அதன் வழியே தனது தனிப்பட்ட அரசியல் பயணம் விரைவில் தொடங்கும் என்று அறிவித்தார்.

மூன்று தினங்களாக தில்லியில் கட்சித் தலைவர் நிதின் நபின், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார் அண்ணாமலை. அந்நேரம் அவர் தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்ததாகவும், அவர் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் செய்திகள் தேசிய அளவிலும் வலம் வந்தன. 

இந்நிலையில் அவரது விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அரசியலில் முக்கிய நிகழ்வாக ஆனது. சமூக ஊடகங்கள் வாயிலாக நேரலை வீடியோவில் தோன்றிய அவர், தனது ராஜினாமாவுக்கான காரணங்களை விளக்கியதோடு, ‘வளர்ந்த பாரதம்’ கனவோடு புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்குவதாகவும் பிரகடனம் செய்தார்.

மதியம் 12 மணிக்கு சமூகத் தளப் பக்கத்தின் வாயிலாக தமது முடிவினை தெரிவிக்கப் போவதாகக் கூறி அவர் சமூகத் தளத்தில் பேசியவை…

“நான் டிசம்பர் 4, 2025 அன்றே பாஜக தேசியத் தலைமைக்குச் சென்று கட்சியிலிருந்து விலக விரும்புவதாகத் தெரிவித்துவிட்டேன். இந்த முடிவு திடீரென எடுக்கப்படவில்லை. கடந்த டிசம்பர் 2025லேயே இதை மூத்த தலைவர்களிடம் தெரிவித்து விட்டேன். அவர்களை மன ரீதியாகத் தயார் படுத்தினேன். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜக தலைமை தேர்தல் முடியும் வரை பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு கோரியது, அதை மதித்து எனது கடமையை நிறைவேற்றிய பின்னரே இப்போது விலகியுள்ளேன்… என்றார் அண்ணாமலை.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

“என்னுடைய கருத்துகளுக்கு கட்சி தலைமை செவிசாய்க்கவில்லை. எனவே எதிர்காலத்தை நோக்கி புதிய பயணத்தைத் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று ஆதங்கத்துடன் பகிர்ந்துகொண்ட அண்ணாமலை, தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படப் போவதாகக் கூறினார்.

தனது அரசியல் பயணத்தின் ஆரம்ப கால நினைவுகளைப் பகிர்ந்த அண்ணாமலை, 2020-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னை அவரது அரசியல் கட்சியில் இணைய அழைத்ததை நினைவுகூர்ந்தார். “ரஜினி சார் மீது மிகுந்த மரியாதை இருந்தபோதிலும், அப்போது சில காரணங்களால் அந்த அழைப்பை ஏற்க முடியவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

பாஜகவிலிருந்து விலகிய அண்ணாமலை, தமிழக மக்களுக்கான பிராந்திய அரசியல் இயக்கத்தைத் தொடங்குவதாக அறிவித்தார். இதற்கென wearetheleaders.org என்ற இணையதளத்தையும் அவர் அறிமுகப்படுத்தினார். “வளர்ந்த பாரதத்தை நோக்கி இளைஞர்களும் பொதுமக்களும் இணையலாம்” என்று அழைப்பு விடுத்தார்.

இந்த இயக்கத்தின் முக்கிய அம்சங்கள்:

அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்: இயக்கத்தில் இணையும் அனைவருக்கும் அரசியல், சமூகப் பயிற்சி அளிக்கப்படும். முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பெயரில் சிறப்பு பயிற்சி மையம் தொடங்கப்படும்.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

வாரிசு அரசியல் ஒழிப்பு: தகுதி அடிப்படையிலான அரசியலை ஊக்குவிக்கும். பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள்.

நிரந்தரப் பதவிகள் இல்லை: “நிரந்தர தலைவர், நிரந்தர எம்எல்ஏ, எம்பி என்ற கலாச்சாரம் இருக்காது. தகுதியானவர்கள் முன்னிறுத்தப்படுவார்கள்” என்று அண்ணாமலை உறுதியளித்தார்.

அடுத்த தேர்தலில் முழு பலம்: வரும் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது.

அண்ணாமலை தமிழக அரசியலில் தனிநபர் வழிபாட்டு அரசியலை மாற்றி, கூட்டுத் தலைமை மற்றும் மக்கள் நலன் சார்ந்த அரசியலை கொண்டு வருவதாக வலியுறுத்தினார். அவரது இந்த அதிரடி முடிவு தமிழக அரசியல் கட்சிகள், தலைவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related articles

Recent articles

spot_img