தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதனால் ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டதுதான் ஊகாயனூர். இங்கு 5-வது வார்டு வேட்பாளராக பொல்லிகாளிபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் களம் இறங்கினார். இந்த ஊராட்சியில் பதிவான வாக்குகள் ஏஞ்சல் என்ஜினியரிங் காலேஜில் எண்ணப்பட்டன.
அப்போது பூத்துக்குள் சுப்பிரமணியம் ஆவலுடன் நின்றிருந்தார். பூத்துக்கு வெளியே இவரது மகன் கார்த்தி டென்ஷனில் காத்திருந்தார். கார்த்திக்கு வயது 21
கார்த்தியை சுற்றிலும் நண்பர்கள் கூட்டம் இருந்தது. இவர்கள் அனைவருமே சுப்பிரமணியத்துக்காக தீவிரமாகவும், ஆர்வமாகவும் பிரச்சாரம் செய்தவர்கள்.
வாக்கு எண்ண தொடங்கியதும், தன் அப்பாவுக்கு எத்தனை ஓட்டுக்கள் என்ற விவரத்தை அடிக்கடி கேட்டு தெரிந்து கொண்டே இருந்தார் கார்த்தி. இறுதியில் சுப்பிரமணியம் 18 ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்துவிட்டார்.
சுப்பிரமணியம் வார்டு உறுப்பினர் என அறிவிக்கப்பட்டதுமே வெளியில் நின்று கொண்டிருந்த கார்த்தி, உடனே தன் அம்மாவுக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னார்.
ஒவ்வொரு நிமிஷமும் உற்சாகத்தில் குதித்தபடியே இருந்தார்.. நண்பர்களுடன் ஆட்டம் பாட்டம் என துள்ளினார். அப்போது திடீரென கார்த்தி மயங்கி விழுந்துவிட்டார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனால், கார்த்தி இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர். அப்பா வெற்றி பெற்றதை அமர்க்களமாக கொண்டாடிய மகனின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்திவிட்டது!