சென்னை: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் கருவுற்ற 10ஆம் வகுப்பு மாணவியின் கருவைக் கலைக்க அரசு மருத்துவர்களுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சென்னையில் 16 வயதான 10ஆம் வகுப்பு மாணவி, அவரது வீட்டுக்கு வந்து சென்ற ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனால், அந்தச் சிறுமிக்கு கரு உண்டானது. தற்போது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத முடியாத நிலையில் அந்தச் சிறுமி வீட்டில் உள்ளார். அந்த மாணவியின் வயிற்றில் இருக்கும் கருவைக் கலைக்கவேண்டும் என்று அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் கோரிக்கை விடுத்தும், அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று சென்னையைச் சேர்ந்த பெண்கள் அமைப்பு ஒன்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி டி.எஸ். சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை ஆய்வாளர், கருவைக் கலைப்பது குறித்து ஆய்வு செய்த அரசு மருத்துவர்கள் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராயினர். அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளீடர் ஆர்.விஜயகுமார், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறை கடந்த 11 ஆம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தது. கருக் கலைப்பு சட்டப்படி, பெற்றோர் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் ஒப்புதல் வழங்கினால் அந்தக் கருவை கலைக்கலாம். இது குறித்து அரசு மருத்துவர்கள் ஆலோசனை நடத்தி, கருவைக் கலைக்க ஒப்புதல் அளித்து விட்டனர். அதற்குள், மனுதாரர் நீதிமன்றத்தை நாடிவிட்டார்” என்றார். இதையடுத்து, “சிறுமியின் கருவைக் கலைக்க பெற்றோரும், அந்தச் சிறுமியும் சம்மதம் தெரிவித்துள்ளதால், அந்தக் கருவை மருத்துவர்கள் உடனடியாகக் கலைக்க வேண்டும்” என்று கூறினார் நீதிபதி. இதற்கு முன்னர், கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பகையைத் தீர்க்க 13 வயதுச் சிறுமியை சசிகுமார் என்ற இளைஞர் பலாத்காரம் செய்தார். இதையடுத்து, அதன்மூலம் ஏற்பட்ட கருவைக் கலைக்க வேண்டும் என்று கோரி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கிலும் சிறுமியின் வயிற்றில் உள்ள கருவைக் கலைக்க கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.
பலாத்காரத்தால் கருவுற்ற 10ஆம் வகுப்பு மாணவியின் கருவைக் கலைக்க நீதிமன்றம் அனுமதி
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

