வெளிநடப்புக்குக் காரணம் என்ன?: அவையில் வழங்க இருந்த அறிக்கையை வெளியிட்டு ஸ்டாலின் விளக்கம்

Published:

சென்னை: இன்று தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் நிலையில், திமுக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. தாங்கள் ஏன் வெளிநடப்பு செய்தோம் என்றும், தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை தாக்கலின் போது பேரவையில் வழங்க இருந்த அறிக்கையையும் திமுக சட்டமன்றக் குழுத் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில், 2015-2016ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை இன்று தாக்கலாகும் நிலையில், அ.தி.மு.க. அரசின் நிதி நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை தமிழ்நாட்டின் ஏடுகள் பல, கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து எழுதி வருகின்றன. சீர் குலைந்து விட்ட நிர்வாகம், சிதைந்து விட்ட நிதி மேலாண்மை ஆகியவற்றினால், அ.தி.மு.க. அரசின் நிதி நிலை, நெருக்கடிவலையில் சிக்குண்டு விட்டது; ஆழமான கடன்களில் மூழ்கித் திவாலாகும் கட்டத்தை எட்டி விட்டது. மின்சார வாரியத்தின் கடன் மட்டும் 72 ஆயிரம் கோடி ரூபாய்; போக்குவரத்துக் கழகங்களில் நிதி இழப்பு 2 ஆயிரம் கோடி ரூபாய்; பொதுத் துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்து மொத்தக் கடன் 4 இலட்சம் கோடி ரூபாய். செயலற்ற அரசு என்பதால், அ.தி.மு.க. அரசு கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான வழிவகைகளைத் தேடும் திறனின்றித் திண்டாடுகிறது. தமிழகத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசின் நிதி ஒதுக்கீடு வெகுவாகக் குறைக்கப்பட்டு விட்டது. உலக வங்கியோ, ஆசிய வளர்ச்சி வங்கியோ தமிழக அரசுக்கு நிதியேதும் வழங்கிடத் தயக்கம் காட்டுகின்றன. தொழில் உற்பத்தி வளர்ச்சியில் தமிழகத்திற்குக் கிடைத்திருப்பது, கடைசி இடமான 18வது இடம். தமிழ் நாட்டின் உற்பத்தி வளர்ச்சியை எடுத்துக் கொண்டால், தி.மு.க. ஆட்சியில் 2009-2010இல் 29.18 சதவிகிதம். அ.தி.மு.க. ஆட்சியில் 2012-2013இல் 1.31 சதவிகிதம். வேளாண்மை வளர்ச்சியோ மைனஸ் 12 சதவிகிதமே! இந்த நிதி ஆண்டுக்கான (2014-15) பற்றாக்குறை 25 ஆயிரத்து 714 கோடி என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இது அடுத்த (2015-2016) நிதி ஆண்டில் 28 ஆயிரத்து 579 கோடியாக உயரப் போகிறது. இந்தப் பற்றாக்குறையை சமாளிக்க என்ன செய்யப் போகிறார்கள்? பற்றாக்குறையை உயர்த்தி – கடன்தொகையையும் உயர்த்தி – தொழில் வளர்ச்சியிலும், உற்பத்தி வளர்ச்சியிலும் தமிழகத்தைக் கடைசி இடத்திற்குக் கொண்டு வந்துள்ள அ.தி.மு.க. அரசு – ஊழல் பட்டியலில் மட்டும் அனைத்து இந்தியாவிலேயே முதல் இடத்தை எட்டியிருக்கிறது. முட்டை வாங்குவதிலும், பருப்பு வாங்குவதிலும் ஊழல் – நெடுஞ்சாலைப் பணிகளிலே ஊழல் – மாநகராட்சி களிலே மண்டிக் கிடக்கும் ஊழல் – ஆவின் பாலில் ஊழல் – மின்சாரம் வாங்குவதிலே கோடி கோடியாக ஊழல் – அரசுப் பணிகளுக்கு டெண்டர் விடுவதிலே ஊழல் என்று அனைத்துத் துறைகளிலும் பல்லாயிரம் பல்லாயிரம் கோடி ரூபாய் லஞ்சம், ஊழல்! திருமண நிதி உதவித் திட்டத்திலிருந்து, இலவசப் பசு வரை, நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஏழைப் பயனாளிகள் வழங்க வேண்டிய லஞ்சம்; அரசுத் துறைகளில் பதவி உயர்வுக்கும், மாறுதலுக்கும் கொடுக்க வேண்டிய லஞ்சம்; பட்டியலிடப்பட்டு ஏடுகளில் வெளியாகியுள்ளன. அ.தி.மு.க. அரசின் அடி முதல் நுனி வரை லஞ்சம் – ஊழல் புரையோடிப் புற்று நோயாகப் பரவிவிட்டது. ஆட்சியாளர்களின் மிரட்டலுக்கு அஞ்சி, அரசின் நேர்மையான அதிகாரிகள் எல்லாம் தற்கொலை செய்து கொண்டு சாகிறார்கள். தமிழகத்தில் 85 இலட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்துக் கிடக்கும் நிலையில்; அரசுத் துறைகளில் நான்கு இலட்சம் காலிப் பணியிடங்கள்! அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு முறை கூட அரசு ஊழியர் சங்கங்களை அழைத்துப் பேச முன் வரவில்லை. ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் அலுவலர்கள், வேறு வழியின்றிப் போராட்டப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். கடுந்தேளாகக் கொட்டும் கடன்கள்; கட்டுப்பாட்டுக்குள் இல்லாத சட்டம் – ஒழுங்கு; கரை புரண்டோடும் லஞ்சம் – ஊழல்; பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுச் செயலிழந்து விட்ட நிர்வாகம்; விவசாயிகள், மீனவர், நெசவாளர் பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படாத பெரும் பின்னடைவுகள்; குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விட்ட ஜனநாயக மரபுகள்; எனத் தமிழகத்தை இருள் சூழ்ந்திருக்கும் இந்த வேளையில், நிதி நிலை அறிக்கையைச் சமர்ப்பித்திடும் தார்மீகத் தகுதியை அ.தி.மு.க. அரசு இழந்து விட்டது. விளம்பரத்திற்காக வைக்கப்படும் கவைக்குதவாத வெறும் காகித அறிக்கையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறோம். – என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img