சென்னை: கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் சனிக்கிழமை மார்ச் 28ம் தேதி முழ்க் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் இன்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து விளக்கினர். கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது உள்பட 3 இடங்களில் தடுப்பணை கட்ட முடிவு செய்துள்ளது. இந்த பணிகளை தொடங்க கர்நாடக அரசு பட்ஜெட்டில் ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தடுப்பணைகள் கட்டினால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து விடும் என்பதால் மேகதாது திட்டத்துக்கு தடை விதிக்க கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த திட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. மத்திய அரசு ஒப்புதல் அளிக்காத நிலையில் மேகதாது தடுப்பணை கட்டும் திட்டத்தை நிறைவேற்ற கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகளும், விவசாயிகள் சங்கங்களும் ஒட்டு மொத்தமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த பிரச்சனையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் வருகிற 28–ந்தேதி (நாளை மறுநாள்) தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேகதாது தடுப்பணைத் திட்டம் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் காவிரி படுக்கையில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்துகிறது. இதை அடுத்து அனைத்து விவசாய சங்கங்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாய சங்க பிரதிநிதிகள் இன்று கோட்டைக்கு சென்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினர். அப்போது 28–ந்தேதி முழு அடைப்புக்கு ஆதரவு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
சனிக்கிழமை கடையடைப்பு: முதல்வருடன் விவசாய சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழு சந்திப்பு
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

