ஐ.சி.சி டி20 போட்டி – 26.10.2021
முனைவர் கு. வை பாலசுப்பிரமணியன்
நேற்று செவ்வாய்க்கிழமை இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் துபாயில் மேற்கு இந்தியத்தீவுகள் அணிக்கும் தென் ஆப்பிரிக்கா அணிக்கும் இடையே நடந்தது.
இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஒருவரை சென்ற ஆண்டு காவலர் ஒருவர் கொன்றதற்காக, தாங்கள் நிறவெறிக்கு எதிரானவர்கள் என்பதைக் காண்பிக்க, தென் ஆப்பிரிக்க அணியினரை மண்டியிட்டு அஞ்சலி செலுத்தச் சொல்லி தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் போர்டு உத்தரவு பிறப்பித்திருந்தது,
க்விண்டன்-டி-காக் இந்த நிபந்தனையை ஏற்க மறுத்து இன்று விளையாடவில்லை. பூவா தலையா வென்ற தென் ஆப்பிரிக்கா அணி மேற்கு இந்தியத்தீவுகள் அணியை மட்டையாடச் சொன்னது. இதற்கு முன்னர் இரண்டு அணிகளும் ஒரு ஆட்டத்தில் தோல்வியுற்றிருந்தன. அதுவும் மேற்கு இந்தியத்தீவுகள் அணி மோசமாகத் தோற்றிருந்தது.
இன்றைய ஆட்டத்திலும் மேற்கு இந்தியத்தீவுகள் அணி ஒன்றும் பிரமாதமாக ஆடவில்லை. இருப்பினும் எவின் லிவிஸ் (56), கிரன் பொலார்ட்(26) இரிவரின் ஆட்டத்தில் இருபது ஓவர் முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 143 ரன் எடுத்தது.
தொடக்க ஆட்டக்காரர் லெண்டல் சிம்மன்ஸ் நிறைய பந்துகளை வீணடித்தார்.
பின்னர் ஆடவந்த தென் ஆப்பிரிக்கா அணி நிதானமாக ஆடி 18.2 ஓவரில் இரண்டு விக்கட் இழப்பிற்கு 144 ரன் எடுத்து ஆட்டத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் ஹெண்ட்ரிக்ஸ் (39), துசான் (43), மக்ரம் (51) சிறப்பாக விளையாடினர். அன்ரிக் நார்ட்ஜ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
பாகிஸ்தான் – நியூசிலாந்து
இரண்டாவது ஆட்டம் ஷார்ஜாவில் பாகிஸ்தான் அணிக்கும் நியூசிலாந்து அணிக்குமிடையே நடந்தது.
நியூசிலாந்து அணிக்கு இது முதல் ஆட்டம். பாகிஸ்தான் ஏற்கனவே இந்தியாவை வென்றிருக்கிறது. அண்மையில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் பாதுகாப்புக் காரணங்களுக்காக விளையாட மறுத்ததில் பாகிஸ்தான் அணி மிகுந்த கோபத்தில் இருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருந்தன.
டாஸ் வென்று பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை விளையாடச்சொன்னது. நியூசிலாந்து அணியின் விக்கட்டுகள் தொடர்ந்து விழுந்துகொண்டிருந்தன. பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர்.
இதனால் ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் நியூசிலாந்து அணிக்கு அமையவில்லை. அந்த அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 134 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
பாகிஸ்தான் அணி ஆடியபோது அதன் ரன்ரேட் 16 ஓவர் வரை நியூசிலாந்தின் ரன் ரேட்டை விடக் குறைவாக இருந்தது. ஆனால் இலக்கு 135 ரன் என்பதனால் பாகிஸ்தான் எளிதில் 18.4 ஓவரில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 135 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இன்றும் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து தரப்பிலும் பாகிஸ்தான் அணி சிறப்பாக ஆடியது. குரூப் 2 பிரிவில் கண்டிப்பாக அரையிறுதிக்குச் செல்லும் அணியாகச் செல்ல, பாகிஸ்தான் அணிக்கு நிறைய வாய்ப்பிருக்கிறது.