பிரைவேட் பார்ட்டிக்கு அணுகிய விபசார கும்பல் விவரங்களை போலீஸார் வெளியிட வேண்டும்: அமலாபால் அதிர்ச்சி அறிக்கை

Published:

நடிகை அமலாபால் இன்று வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கையில், ஜனவரி 31ம் தேதி டான்ஸ் ஸ்டுடியோவில் என்ன நடந்தது என்பது குறித்து விவரமாகக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை அமலா பால் கொடுத்த பாலியல் புகார் வழக்கில் சென்னையை சேர்ந்த அழகேசன் மற்றும் அவரது நண்பர் பாஸ்கர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் அமலா பால் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

பிரைவேட் பார்ட்டிக்கு தன்னை அணுகிய விபச்சாரக் கும்பல் தொடர்பான அனைத்து விவரங்களையும் போலீசார் வெளியிட வேண்டும் என நடிகை அமலாபால் அதில் வலியுறுத்தியுள்ளார்.

amalapaul1 - 2026

தமிழ், மலையாள திரையுலகில் முன்னணி நடிகையான அமலா பால் வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசிய நிகழ்ச்சிக்காக, சென்னை தியாகராயர் நகர் பகுதியில் உள்ள தனியார் நடன பள்ளி ஒன்றில் ஜனவரி 31ஆம் தேதி பயிற்சியில் ஈடுபட்டிருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

அப்போது தன்னை அணுகிய நபர், மலேசிய நிகழ்ச்சிக்குப் பிறகு பிரைவேட் பார்ட்டி ஒன்று இருப்பதாகவும், அதில் தம்மை கலந்துகொள்ளுமாறு அந்த நபர் கேட்டதாகவும் அமலாபால் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

“அது என்ன பிரைவேட் பார்ட்டி” என தாம் கேட்டபோது, ஒன்றும் தெரியாத குழந்தை போல பேச வேண்டாம் என அந்த நபர் கூறியதாகவும், இந்த அசிங்கமான உரையாடலின்போது தன்னைச் சுற்றி யாரும் இல்லாததால் உதவிக்கு ஆட்களை அழைத்ததாகவும் அமலாபால் கூறியுள்ளார்.

amalapaul2 - 2026

தனது நலன் விரும்பிகளும், பணியாளர்களும் வருவதற்கு அரை மணி நேரம் வரை ஆனதாகவும், தன்னிடமிருந்து சாதகமான பதில் வரும் என அதுவரை அந்த நபர் அங்கேயே காத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது ஆட்கள் வந்து அந்த நபரை பிடித்தவுடன், விருப்பமில்லை என்றால் முடியாது என கூறிவிட வேண்டியதுதானே அதை ஏன் பெரிதாக்க வேண்டும் என அந்த நபர் கூறியதாகவும் அமலாபால் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பிறகே அந்த நபர் விபச்சாரக் கும்பலை சேர்ந்தவன் என்பதை தாம் உணர்ந்ததாகவும், தமது தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் மட்டுமல்லாது மலேசிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நடிகைகளின் விவரங்களையும் அந்த நபர் செல்பேசியில் பதிவு செய்து வைத்திருந்ததாகவும் அமலாபால் கூறியுள்ளார்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

இந்த விவகாரத்தில் விரைந்து செயல்பட்டு, விபச்சாரக் கும்பலின் செயல்பாடுகளுக்கான ஆதாரங்களை கண்டுபிடித்ததுடன், அதில் தொடர்புடைய 2 முக்கிய நபர்களை கைது செய்ததற்கு போலீசாருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமலாபால் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிலருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாவும், இருப்பினும் இந்த விவகாரத்தில் போலீசார் விசாரணையை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என்றும், விபச்சாரக் கும்பல் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும் என்றும் அமலாபால் வலியுறுத்தியுள்ளார்.

தன்னைப் பற்றியும், தனது மேலாளரை பற்றியும் சில ஊடகங்கள் அடிப்படை ஆதாரமின்றி அவதூறாக செய்தி பரப்பி வருவதாகவும், விசாரணை நடந்து வருகிறது, அதற்கு தடையாக நான் இருக்கக் கூடாது என்பதாலேயே நான் அமைதி காத்து வருகிறேன். ஆனால் அந்த மாதிரி கீழ்த்தரமாக செய்தி வெளியிடும் மீடியாக்கள் மீது அவதூறு வழக்கு தொடரவும் தயங்க மாட்டேன். சென்னை போலீசின் விசாரணையில் எங்கள் குழு மீதோ, மேனேஜர் பிரதீப்குமார் மீதோ எந்த தவறும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. எனவே அவர்கள் மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய தாம் தயங்கப்போவதில்லை எனவும் அமலாபால் எச்சரித்துள்ளார்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

Related articles

Recent articles

spot_img