சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், கவர்னர் ஆர்.என். ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி அறிக்கையில் கூறியுள்ளதாவது,
கவர்னர் ரவியை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று கேட்டு கொண்டார்.
மருத்துவ மாணவர் சேர்க்கை விரைவில் துவங்க உள்ள நிலையில், தமிழக சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்டமுன்வடிவு 2022க்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், இந்த சந்திப்பின் துவக்கத்தில், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வடிவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தமைக்கு கவர்னரிடம், முதல்வர் நன்றி தெரிவித்தார்.
மேலும் தமிழக சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட கூட்டுறவு சங்கங்கள்(திருத்தச்) சட்ட முன்வடிவு, 1983, தமிழக அடுக்குமாடி குடியிருப்பு உரிமை சட்ட முன்வடிவு, 2022, தமிழக பல்கலை சட்ட முன்வடிவு 222 உள்ளிட்ட 21 சட்ட முன்வடிவுகளுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து, அரசியல்சாசனத்தின் உணர்வையும் தமிழக மக்களின் விருப்பத்தையும் நிலைநிறுத்திடுமாறு ஸ்டாலின் கேட்டு கொண்டதாகவும் இந்த சந்திப்பின் போது, அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன், தங்கம் தென்னரசு ஆகியோரும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





