
சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 10ம் தேதி இன்று மாலை திறக்கப்பட்டது. சபரிமலையில் பிரசித்தி பெற்ற விஷுக்கனி தரிசனம் 15ம் தேதி நடைபெறுகிறது.தமிழகத்தில் ஏப்ரல் 14ல் சித்திரை விஷு கொண்டாடப்படுகிறது.
சித்திரை விஷு பண்டிகை மற்றும் சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கமாகும். கேரளாவில் இவ்வருட சித்திரை விஷு பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று 10ம் தேதி மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் திறக்கப்பட்டது.
இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு 15ம் தேதி அதிகாலை 4 மணி முதல் காலை 7.30 வரை விஷுக்கனி தரிசனம் நடைபெறும். விஷுக்கனியை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் நாணயங்களை வழங்குவார்கள். வரும் 18ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். அன்று இரவு 10 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கியது.
வரும் 18-ந் தேதி வரை 8 நாட்கள் நெய்யபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலச பூஜை, புஷ்பாபிஷேகம் நடைபெறும்.



