
ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம் தேர்ந்தெடுப்போம் என, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவரது அறிக்கை:
வருகின்ற ஏப்ரல் 23 அன்று தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. ஜனநாயகத்தின் திருவிழாவான இந்த தேர்தலில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான நமது மாநில ஆளுமையை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்பதை மனதில் கொண்டு நாம் தவறாமல் வாக்களிக்க வேண்டும்.
கடந்த காலங்களில் நமக்கு கிடைத்தப் படிப்பினையை கவனத்தில் கொண்டு, வருங்கால ஆட்சியை நாம் தேர்ந்தெடுக்க ஜனநாயகம் தந்திருக்கும் வாக்குரிமை எனும் ஆயுதத்தை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.
ஜனநாயகத்தின் தாயகம் நமது தமிழ்நாடு. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் தங்கள் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் முறை தமிழகத்தில் பின்பற்றப்பட்டது. அதற்குச் சான்றாக செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் திருக்கோவில் கல்வெட்டு ஆதாரமாக உள்ளது. மேலும் குடவோலை முறை பற்றி தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. அதில் வேட்பாளருக்கான தகுதி மிகத் துல்லியமாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இவற்றை காணும்போது நவீன உலகில் வாழும் நாம் ஏன் அவற்றை கவனத்தில் கொள்ளவில்லை என்ற கேள்வி எழுகிறது.
மகாகவி பாரதி பாடியதைப் போல நாம் எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதற்கிணங்க, உலகிலேயே இந்திய ஜனநாயகத்தில் தான் அனைத்து மக்களுக்கும் சமமான வாக்குரிமை எந்த வேறுபாடும் இல்லாமல் முதன்முதலில் வழங்கப்பட்டது. நமது நாடு நமக்கு அளித்த பெருமைமிகு வாக்குரிமையை நாம் பொறுப்புணர்வுடன் நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளோம்.
ஒரு விவசாயி நல்ல விதைகளை விதைக்க வில்லை என்றால் எப்படி அறுவடையில் முழு பலனைப் பெறாமல் போவானோ, அதுபோல இந்த தேர்தலில் நல்ல ஆளுமை இல்லாத பதர்களை தேர்வு செய்தால் அடுத்த ஐந்தாண்டுகளில் நாம் அனுபவிப்பது வேதனை ஆகும்.
இறைவன் நமக்கு துணை இருப்பார். போராடி நமக்கான வெற்றியை பெற வேண்டியது நமது முயற்சி ஆகும். மகாபாரதத்தில் கிருஷ்ணர் துணை இருந்தார், அர்ஜுனனுக்கு தேர் ஓட்டினார். போரில் வெல்ல நீதிபோதனைகளை அளித்தார். ஆனால் போராட வேண்டியது அர்ஜுனன் தான் என உணர்த்தினார்.
கடந்த ஐந்தாண்டுகளில் திமுக எனும் தீய சக்தி தேசத்தை அவமதிக்க துடித்தது. ஒற்றுமையை, ஒருமைப்பாட்டை சிதைக்க செயல்பட்டது. இந்துக்களின் அடிப்படை உரிமைகளை புறக்கணித்தது. ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சென்றே போராடி அனுமதி வாங்க வேண்டியிருந்தது.
இந்துக்களையும் இந்து நம்பிக்கைகளையும் கொச்சைப்படுத்தி பொதுவெளியில் அவமதித்தது திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும். அதற்கெல்லாம் மேலாக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தும் அதனை அவமதித்து.
கிறித்துவ முஸ்லிம் மதத்தலைவர்கள் திமுகவை நேரடியாக தங்களுக்கு சாதகமான கட்சி என்று தெரிவித்துள்ளனர். பகிரங்கமாக தங்களது ஆதரவை திமுகவிற்கு தெரிவித்ததை செய்திகளில் பார்க்கிறோம். இந்துக்களாகிய நாம் நமக்கு ஆதரவான கட்சியை ஆதரித்து, தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறினால் அதனை மதவாதம் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்து முன்னணி அரசியல் கட்சி இல்லை. நேரடி அரசியலில் ஈடுபடாது. ஆனால் அரசியலில் இந்துக்களின் நலனை எடுத்துக் கூறுவது நமது கடமை.
எனவே வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைவரும் தவறாமல் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும். இந்து விரோத திமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும். இந்துக்களின் கோரிக்கைகளை ஏற்று கொண்ட அதிமுக பாஜக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.




