
‘கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, இந்துமுன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை..
தமிழகம் முழுவதும் கடந்த 22 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழா அவர்கள் கட்சியின் சார்பாக கொண்டாடப்பட்டது. இந்து முன்னணி சார்பிலும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் தமிழகத்திற்கு நல்லாட்சி கொடுக்க வேண்டும் என இறைவனை வேண்டுகின்றோம். தவெக கட்சியின் சார்பில் கொண்டாடப்பட்ட பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில், பல கோயில்களின் கருவறைக்குள் ஜோசப் விஜய் படத்தை வைத்து வழிபட்டுள்ளனர். இது அங்கு வருகை தந்த பக்தர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக பழனி தண்டாயுதபாணி கோயிலில் தவெக கட்சியின் மாவட்ட செயலாளர் கார்த்திக் ராஜா தலைமையில் நடைபெற்ற தங்கத்தேர் நிகழ்வில் தங்கத்தேரில் விஜய் படத்தை வைத்துள்ளனர். இதற்கு முருக பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.
அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பலபட்டரை மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற முதல்வரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில், அந்தக் கோயிலில் பூஜை செய்கின்ற பூசாரியை மிரட்டி அம்மன் கருவறைக்குள் அம்மனுக்கு இணையாக விஜய் படத்தை வைத்து வழிபட்டு இருக்கின்றனர். இது அங்கு வழிபட வருகை தந்த பக்தர்களுக்கும் அதை சமூக வலைதளங்கள் மூலமாக கண்டர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியும் முகம் சுளிக்கும் வகையில் இருந்திருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தவெக மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விநாயகர் கோயிலிலும், அம்மன் கோயிலிலும் கருவறையில் ஜோசப் விஜய் அவர்கள் படத்தை வைத்து வழிபட்டது, மேலும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது..
தமிழகத்தில் இந்து சமுதாய மக்கள் வழிபடுகின்ற தெய்வத்திற்கு இணையாக தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் படத்தை வைத்து வழிபட்ட தமிழக வெற்றி கழகம் கட்சியினரின் செயல் தமிழக பக்தர்களிடையே அதிர்ச்சியும் மிகுந்த மன வருத்தத்தையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.
ஆகவே தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் உடனடியாக தங்களது கட்சியினருக்கு தமிழகத்தில் பெரும்பான்மை இந்து சமுதாய மக்கள் வழிபடுகின்ற தெய்வத்திற்கு இணை கற்பித்து கருவறைக்குள் படத்தை வைத்து பூஜை செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்த வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.



