
ஆ.மாதவன் 1934ல் திருவனந்தபுரத்தில் பிறந்தார். தந்தை பெயர் ஆவுடைநாயகம் பிள்ளை. தாயார் செல்லம்மாள். ஆ. மாதவனின் தந்தையின் ஊர் இன்றைய தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை. தாயாரின் ஊர் நாகர்கோயில். இவை இரண்டுமே அந்நாட்களில் பிளவுபடாத திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தவை. அந்நாட்களிலேயே ஆவுடைநாயகம் பிள்ளை குடும்பத்துடன் திருவனந்தபுரத்துக்குக் குடிபெயர்ந்து விட்டார்.
ஆ.மாதவனின் தந்தை திருவனந்தபுரம் சாலை அங்காடியில் சிறுவணிகராக இருந்தார். பள்ளிப்படிப்பை முடித்த ஆ.மாதவன் மேலே படிக்கவில்லை. திராவிட இயக்க ஆதரவாளராக எழுத ஆரம்பித்தார். அவரது முதல் கதை 1955ல் ’சிறுகதை’ இதழில் வெளியாகியது. பின்னர் மலையாளம் வழியாக நவீன இலக்கிய அறிமுகம் பெற்று தீவிர இலக்கியதளத்தில் செயல்படத் தொடங்கினார். அவரது முதல் சிறுகதைத் தொகுதி மோகபல்லவி. கடைத் தெருக்கதைகள் இவருக்குப் புகழைத்தேடித்தந்த தொகுப்பு!
ஆ.மாதவன் திருவனந்தபுரம் சாலைத் தெருவில் செல்வி ஸ்டோர்ஸ் என்ற பாத்திரக் கடையை 75 வயது வரை நடத்திவந்தார். சாலைத் தெருவை பின்னணியாகக் கொண்டே அவரது பெரும்பாலான கதைகள் அமைந்திருக்கின்றன. இதனால், கடைத்தெருவின் கதைசொல்லி என்று அவரது வாசகர்கள் அழைக்கின்றனர்.
1974ல் ஆ.மாதவனின் முதல் நாவலான ’புனலும் மணலும்’ வெளி வந்தது. கரமனை ஆற்றில் மணல் அள்ளும் ஒரு குடும்பத்தின் கதை அது. அந்நாவல் அதன் யதார்த்தத்துக்காகப் பெரிதும் கவனிக்கப்பட்டது.
1982ல் வெளிவந்த கிருஷ்ணப்பருந்து என்ற நாவல், ஆ.மாதவனின் புகழை மேலும் பரப்பியது. 1990ல் அவரது மூன்றாவது நாவலான ’தூவானம்’ வெளிவந்தது.
1974ல் காரூர் நீலகண்டபிள்ளை எழுதிய சம்மானம் என்ற குறுநாவலை தமிழாக்கம் செய்தார். 2002ல் சாகித்ய அக்காதமி வெளியீடாக மலையாள எழுத்தாளர் பி கெ பாலகிருஷ்ணனின் இனி ஞான் உறங்ஙட்டே என்ற நாவலை இனி நான் உறங்கட்டும் என்ற பேரில் மொழியாக்கம் செய்தார்.
மாதவனின் மனைவி பெயர் சாந்தா. இவர்களுக்கு 1966ல் மணமானது; கலைச்செல்வி, மலர்ச்செல்வி என்ற இரு மகள்கள் கோவிந்தராஜன் என்ற மகன். 2002ல் மனைவியும் 2004ல் மகனும் மறைந்துவிட்டனர். மகளுடன் வசித்து வந்த மாதவன், இன்று காலமானார்.
ஆ.மாதவன் மறைவு குறித்து, திமுக., செய்தித் தொடர்பாளரும் மூத்த வழக்குரைஞரும் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் குறிப்பிடுகையில்…
படைப்பாளி ஆ.மாதவன் அவர்கள் ( 86 வயது) இன்று காலமானார். 1934-ல் பிறந்த இவர் திருவனந்தபுரம் சாலைத் தெருவை பின்னணியாகக் கொண்டே அதிகமான சிறுகதைகளை எழுதியவர். அவர் கடைத்தெருவின் கதைசொல்லி என்று அழைக்கப் படுகிறார். அங்குள்ள பத்மநாபசாமி கோவில் அருகே இருந்த இவரின் கடையில் இரண்டு தடவை சந்தித்ததுண்டு. கதைசொல்லி பற்றி அடிக்கடி செல்பேசியில் விசாரிப்பார்.
7 சிறுகதைத் தொகுப்புகள், 3 நாவல்கள், இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள், ஒரு கட்டுரைத் தொகுப்பு ஆகிய குறிப்பிடத் தக்க படைப்புகளைத் தமிழுக்குத் தந்திருக்கிறார்.
தமிழக அரசின் இயல் துறைக்கான 2007ஆம் ஆண்டு கலைமாமணி விருது ஆ.மாதவனுக்கு வழங்கப்பட்டது. ‘இலக்கிய சுவடுகள்’ என்ற திறனாய்வு கட்டுரை நூலுக்காக 2016 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருதினையும், 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் விஷ்ணுபுரம் இலக்கிய விருதையும் பெற்றவர். ஆழ்ந்த அஞ்சலி… என்று குறிப்பிட்டுள்ளார்.