தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணியில் மலையேற்றம் சென்று தீவிபத்தில் சிக்கி வெளிநாட்டில் இருந்து திரும்பிய புதுமணத் தம்பதி பலியான சோகம் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
மலையேற்றத்துக்கு வந்த புதுமண தம்பதி உயிரிழந்த நிலையில், இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் உடல்கள் மீட்கப்பட்ட காட்சி பலரின் நெஞ்சைப் பிழிவதாக அமைந்தது.
ஈரோட்டை சேர்ந்த புதுமண தம்பதி திவ்யா-விவேக் ஆகியோருக்கு திருமணம் முடிந்து மூன்றரை மாதங்களே ஆகிறது. துபாயில் இருந்த விவேக் கடந்த மார்ச் 1ம் தேதி நாடு திரும்பியுள்ளார். சொந்த நாட்டுக்கு வந்த கையுடன் தன் மனைவியுடன் மலையேற்றத்துக்குச் சென்றுள்ளார். மலையேற்றத்துக்கு முன்னர், விவேக் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் கொழுக்குமலை பகுதிக்கு ட்ரெக்கிங் செல்வதாக புகைப்படத்துடன் மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அவரது பேஸ்புக் பக்கத்தில் இவர்கள் உயிரிழந்த செய்தி அறிந்து பலரும் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, குரங்கணி பகுதியில் 39 பேரை மலையேற்றத்திற்கு அழைத்துச் சென்ற சுற்றுலா வழிகாட்டி ராஜேஷ் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்தது தொடர்பாக ராஜேஷிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.