திருநெல்வேலி: பிளஸ் 2 தேர்வு முடித்து வரும் மாணவனின் டிரெஸ்ஸை கழட்டச் சொல்லி மிரட்டும் ஆசிரியர் குறித்து ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நாகர்கோவில் வடசேரி SMRV மேல்நிலைப் பள்ளி செயலாளர் S. குமாரசாமி +2 அரசுத் தேர்வு எழுதி வரும் மாணவனின் மேலாடையை ஆசிரியைகள் முன்னிலையில் கழற்றச் சொல்லி மிரட்டுகிறார். இப்படி மாணவர்களை இழிவு படுத்தி, ரவுடி போல செயல்படுவது குற்றம் என்றும், அரசு சம்பளம் வாங்கும் பிற ஆசிரியர்கள் கைகட்டி வேடிக்கை பார்ப்பது அபத்தம் என்றும், இந்தக் குற்றச் செயலுக்கு பொறுப்பான தலைமை ஆசிரியை மீது மாவட்ட கல்வித் துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இந்த வீடியோ சமூக தளங்களில் வேகமாகப் பரப்பப் பட்டு வருகிறது.
இந்த வீடியோவில், எலே கம்பெடுத்துட்டு வாங்க… எலேய் கழட்டுல… ஏ..நான் பெரிய ரவுடி தெரியுமால ..உனக்கு? ஏ..நீ என்ன பெரிய ரவுடியா? கழட்டுல.. கழட்டுல… மரியாதையா கழட்டு, கிழிச்சிருவேன் இல்லைன்னா… என்று அந்த ஆசிரியர் அந்த மாணவரை ஒதுக்குகிறார்… சுவர் ஓரமாக! பேசவே கூடாது, சொன்னபடி செய்யணும்… சரியா! என்று கேட்டு மண்டியிட வைக்கிறார்.
ஆனால், இதற்கு பின்னூட்டங்களும் இல்லாமல் இல்லை. எடுத்தவுடனேயே ஆசிரியரைக் குறைகூறும் முட்டாள்களே, சற்று சிந்தியுங்கள்…. என்ன விவகாரம்? மாணவன் என்ன தவறு செய்தான்? அவர் ஏன் காவல்துறையிடம் மாலையில் ஒப்படைப்பதாக கூறினார்? என்பதைப் பொறுத்தே எதுவும் தீர்மானிக்க முடியும்,
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் மாணவனை அந்த ஆசிரியர் மிரட்டினாரே தவிர அடிக்கவில்லை என்பது… என்றும் இந்த வீடியோ குறித்த பின்னூட்டங்கள் பகிரப் படுகின்றன.