கரூர்: பாலியல் புகார் கொடுத்த பெண் நிர்வாகியை கட்சியை விட்டு நீக்கியுள்ளது திமுக., தலைமை. இந்த நடவடிக்கைக்கு பெண்கள் மத்தியில் பெரும் அதிருப்தி எழுந்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, ஏப்.5ஆம் தேதி கரூர், வெங்கமேட்டில் திமுக., சார்பில் பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிப்பு, கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் ஆகியவை நடத்தப் பட்டது. அப்போது, திமுக., மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஜெயமணிக்கு, வடக்கு நகர இளைஞர் அணி அமைப்பாளர் பிரபாகரன் பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்தப் பெண் புகார் கூறினார். தொடர்ந்து போலீஸிலும் புகார் அளிக்கப் பட்டது.
ஊடகங்கள் முன்னிலையில் அந்தப் பெண் எழுப்பிய புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்து #இடுப்புகிள்ளிதிமுக என்ற டிவிட்டர் ஹாஷ் டாக் பதிவு ட்ரெண்ட் ஆனது.
இந்நிலையில், ஜெயமணி உள்ளிட்ட மூன்று பேர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப் பட்டுள்ளனர். ஜெயமணி, அவரது கணவர் கிரிவாசன், புகாருக்கு உள்ளான பிரபாகரன் மூவரும் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கப் பட்டுள்ளதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
இது குறித்து திமுக., நிர்வாகிகள் தகவல் அளித்த போது, இது உள்கட்சி தனிப்பட்ட நபர்களின் பிரச்னை. அதை வெளியில் கொண்டு சென்றனர் என்று கூறினர். இதனிடையே, பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறிய பெண் நிர்வாகியை நீக்கம் செய்து திமுக., எடுத்த நடவடிக்கை கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.