
சென்னை: தமிழக அரசுக்கு காவிரி விவகாரம் முக்கியமா? அல்லது மெரினா முக்கியமா? என்று கேள்வி எழுப்பியுள்ளது உயர் நீதிமன்றம். ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரையில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளிக்கக் கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பி.அய்யாகண்ணு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.
அய்யாக்கண்ணு தரப்பில் அளிக்கப்பட்ட மனுவில், 90 நாட்கள் மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி கோரப் பட்டிருந்தது. ஆனால், அதற்கு உயர் நீதிமன்றம், ‘மெரினா கடற்கரை என்பது பொதுமக்கள் வந்து செல்லும் பொது இடம். அங்கே தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த 90 நாட்களுக்கு அனுமதி வழங்க உத்தரவிட முடியாது’ என்று கூறியது.
மேலும், தில்லியில் அய்யாகண்ணு மற்றும் விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டம் உள்ளிட்ட பலவிதமான போராட்டங்களை நடத்தினர். இதனைக் குறிப்பிட்ட உயர் நீதிமன்றம், அரை நிர்வாணமாக போராட்டங்களை நடத்த வேண்டாம் என்று அய்யாகண்ணு மற்றும் உடன் இருக்கும் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்குங்கள்’ என்று அய்யாக்கண்ணு சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் கேட்டுக்கொண்டது.

இதன் பின்னர், 90 நாட்களில் இருந்து இறங்கி வந்து, 30 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளிக்கக் கோரியது அய்யாக்கண்ணு தரப்பு. இந்த விவகாரத்தில் காவல்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டது. அதில் மெரினாவில் எந்தவிதமான போராட்டமும் நடத்த அனுமதி அளிக்க முடியாது என்று கூறப்பட்டிருந்தது. மேலும், சென்னையில் போராட்டங்கள் நடத்த என்று ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட ஏதேனும் ஓர் இடத்தில் அய்யாக்கண்ணு உண்ணாவிரதம் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும், 2013-ஆம் ஆண்டுக்குப் பின்னர் மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படுவது இல்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்ற நிலையில், போராட்டத்தை ஒழுங்குபடுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும், போராட்டத்தை தடுக்க அதிகாரமில்லை என்றும் கருத்து தெரிவித்த உயர் நீதிமன்றம், காவிரி விவகாரத்தைவிட மெரினாதான் தமிழக அரசுக்கு முக்கியமா? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியது. மேலும், கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகை காலங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூற முடியுமா? என்றும் கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தது.
கடந்த வருடம் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது, சமூக வலைத்தளங்கள் மூலம் பிரசாரம் செய்யப் பட்டு, மெரினா கடற்கரையில் மாணவர்களைக் கூட்டிய சில அமைப்பினருடன் சமூக விரோதிகள் புகுந்ததும், அவர்களுக்கு பிரியாணி பொட்டலங்கள் விநியோகிக்கப் பட்டு இரவெல்லாம் தங்க வைக்கப் பட்டதும், போராட்டம் வன்முறையாக மாறியதும் போலீஸார் புகுந்து தடியடி நடத்தி மெரினா கலவரக் காடாக மாறியதும், பின்னாளில் எந்தப் போராட்டத்துக்கும் மெரினாவை பயன்படுத்த அனுமதிக்க இயலாது என்று காவல் துறை தரப்பில் கூறப்பட்டதும் கடந்த காலச் செய்திகள்.



