கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகே சாதிக் கட்டுகளை மீறி ஒரு மாணவனைக் காதலித்ததற்காக தன் பேத்தி என்றும் பாராமல் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொன்று போலீஸில் சரணடைந்துள்ளார் அந்தப் பெண்ணின் தாத்தா.
காட்டுமன்னார்குடியை அடுத்த ஆண்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி. இவருடைய பேத்தி ரமணிதேவி (22). காட்டுமன்னார்குடி எம்ஆர்கே கல்லூரியில் முதுகலை படித்து வந்த அவர், அதே கல்லூரியில் படிக்கும் திண்டிவனத்தை அடுத்த கருமபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சபாபதி (24) என்பவரைக் காதலித்தாராம். இருவரும் வெவ்வேறு பிரிவினர் என்று தெரிகிறது. இதனால் வீட்டில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதுதொடர்பாக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. அப்போது காட்டுமன்னார்குடி நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகினர். அப்போது, தான் பெற்றோருடன் செல்வதாக தேவி கூறியதால், அவர் பெற்றோருடன் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது.
ஆனால் வீட்டுக்குத் திரும்பியதும் சபாபதியுடன் மீண்டும் காதலைத் தொடர்ந்துள்ளார் தேவி. இதை அறிந்த அவரது தாத்தா வீராசாமி (66) தனது பேத்தியை இன்று காலை கழுத்தை அறுத்துக் கொன்றார். பின்னர் சோழத்தரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இது போல வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்த காதலர்கள் கௌரவக் கொலை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இவற்றின் பின்னால் அரசியல் கட்சிகள் உள்ளதாகவும் சாதி மாறிக் காதலித்தால் கொன்று விடுங்கள் என்று தனது சாதிக்காரர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளதால் இவ்வாறு நடப்பதாகவும் அப்பகுதி மக்கள் சொல்கின்றனர்.


