சென்னை:
தீபாவளி நேரத்தில் பட்டாசு வெடிக்க விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் கண்டனத்துக்கு உரியவை என்றும், மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. அதன் நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்ட அறிக்கையில்,
உச்ச நீதிமன்றம் மத விஷயத்தில் தலையீட விரும்பவில்லை என ஒருபுறம் கூறிக்கொண்டு, கிறிஸ்தவ, முஸ்லீம் மத விஷயங்களில் தப்பிக்க நினைக்கிறது. அதே சமயம் இந்துக்களின் சமய விஷயங்களில் எல்லைமீறி புண்படுத்தும் விதமாகவும் கருத்துக்களை பதிவு செய்வது வேதனை அளிக்கிறது.
இந்நிலையில் சட்டத்தை மதிக்கவும், பின்பற்றவும் செய்யும் இந்துக்களை தொடர்ந்து இம்சித்து வருவது நீதியின் மீது மக்களுக்கு நம்பிக்கை இழக்க செய்துவிடும் என அஞ்சுகிறோம்.
சமீபத்தில் சிறு குழந்தைகள் இருவர் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்டு, விசாரித்த உச்சநீதி மன்றம் தீபாவளித் திருநாளில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகளை விதித்து எல்லா மாநில அரசுகளுக்கும் அறிக்கை அனுப்பி உள்ளது.
உச்சநீதிமன்றம் எந்த விசாரணையின் அடிப்படையில் இத்தகை தீர்ப்பை வழங்கியது என்பது புரியவில்லை. மத்திய, மாநில அரசுகளின் கருத்துக்களை ஏன் கேட்கவில்லை என்பதும் புரியவில்லை!
தமிழ்நாட்டில் மிகவும் பின்தங்கிய மாவட்டம், வறட்சியில் பெரிதும் பாதிக்கப்பட்டதுமான விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியைச் சேர்ந்தவர்கள் அரசின் எந்த உதவியையும் எதிர்பார்க்காமலும், தங்களது கடின உழைப்பால் பட்டாசு தொழிலை சட்டத்திற்குட்பட்டு செய்து அந்த மாவட்டத்தையே வளமாக்கி உள்ளனர். நாட்டிற்கும் அதனால் அதிக வருவாயை ஈட்டித்தந்துள்ளனர்.
கடந்த 15 ஆண்டுகளாக திட்டமிட்ட ரீதியில் பட்டாசு விற்பனையை சீர்குலைக்க என்னவெல்லாமோ காரணங்களை சில தீய சக்திகள் சொல்லி வருகின்றன. குழந்தைத் தொழிலாளர்கள் பிரச்னை என்றும், பெரிய விபத்து நடக்கும் தொழில் என்றும் இதனால் பல குடும்பங்கள் அழிவதாகவும் கதைகட்டி மாணவர்களிடையே தவறான எண்ணத்தை ஏற்படுத்தி தீபாவளியில் பட்டாசு வெடிக்கக்கூடாது என்ற கருத்தைத் திணித்து பார்த்தார்கள். அது எடுபடவில்லை. தற்போது சுற்றுச்சூழல், ஒலி மாசு முதலியவற்றை காரணம் காட்டுகின்றனர்.
தீபாவளித் திருநாளில் ஒரு நாளையில் இந்த மாசு ஏற்படுவதாக கூறும் நீதிமன்றமும், சுற்றுச்சுழல் ஆர்வளர்களும் வருடந்தோறும் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை, வாகனப் போக்குவரத்தை, நீர் நிலைகளை மாசுபடுத்தும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் முதலானவற்றிக்குத் தடை விதிக்கவோ, தடுக்கவோ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவில்லையே ஏன்? இதற்கு யாராவது வழக்குத் தொடர்ந்தால் கூட அது மத்திய, மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது என நீதிமன்றம் தட்டிக்கழிக்கும் என்பதை நாம் அறிந்ததே.
சீனப் பட்டாசு இறக்குமதிக்கு மத்திய அரசு தடைவிதித்தும் சட்டவிரோதமாக கப்பல் மூலம் நாட்டிற்குள் வருகிறது. இத்தகைய போக்கை பார்க்கும்போது, பட்டாசு கட்டுப்பாடு மற்றும் சீன பட்டாசு வரத்து முதலியவை கம்யூனிஸ்ட்களும், கிறிஸ்தவ மிஷனரிகளும் கைகோர்த்துசெய்யும் சதி வேலையோ என சந்தேகம் எழுகிறது.
தீபாவளி திருநாளில் 5 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதி மன்றம் கூறியிருப்பது மக்களிடையே அதிப்தி ஏற்படுத்திவிடும். சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாடு, பாதுகாப்பு முதலானவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளலாம். ஆனால், பண்டிகையான ஒரு நாளில் கூட நேரக் கட்டுப்பாடு பிறப்பிப்பது என்பது மிகையானது ஆகும்.
உச்சநீதிமன்றம் கூம்பு வடிவ ஒலிபெருக்கியை நீக்க உத்திரவிட்டது. இந்து கோயில்களில் வைக்கப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கியை காவல்துறை நீக்கியது, ஆனால் ஆண்டுகள் சில கடந்த பின்பு அவர்கள் மசூதிகள் பக்கம் ஏன் செல்லவில்லை?
சட்டம் ஒரே மாதிரி இல்லை, அதனை நிலைநாட்ட வேண்டிய நீதிபதிகள் நிலையும் கேள்விக்குறியாகி இருப்பதையே இந்த நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இன்னும் பத்து நாட்கள் இருக்கின்ற நிலையில், வருடந்தோறும் உழைப்பையும், முதலீட்டையும் போட்டுத் தயாரித்துள்ள பட்டாசுகள் விற்பனைக்குக் கட்டுப்பாடு என்ற பெயரில் இடையூறு விளைவிப்பது கண்டனத்திற்கு உரியது.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மத்திய, மாநில அரசுகள் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீதிமன்றத்தில் மக்களின் பிரதிநிதிகள் என்ற முறையில் கருத்து தெரிவித்து முறைபடுத்திட அனுமதி வாங்குவது அவர்கள் கடமை. எனவே வருகின்ற தீபாவளித் திருநாளில் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியோடு கொண்டாட மாநில அரசு தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது – என்று கூறியுள்ளார்.


