
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு அரசின் தொலை தொடர்பு துறை சார்பில் ஒரு செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இந்த குறுஞ்செய்தி பெரும்பாலும் அனைத்து மொபைல் போன் வாடிக்கையாளர்கள் எண்ணுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
“முக்கிய அறிவிப்பு: உங்கள் மொபைலில் எமெர்ஜென்ஸி சூழல் குறித்த டெஸ்ட் மெசேஜை வேறு ஒலி மற்றும் அதிர்வுடன் பெறலாம். தயவுசெய்து பீதி அடைய வேண்டாம், இந்த செய்தி உண்மையான அவசரநிலையைக் குறிக்கவில்லை. இந்தச் செய்தியை இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து திட்டமிட்ட சோதனைச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக அனுப்புகிறது”
“தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து, பேரிடர்களின் போது அவசரகால தகவல்தொடர்புகளை மேம்படுத்தவும், மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் செல் ஒலிபரப்பு எச்சரிக்கை அமைப்பு சோதனை நடத்தப்படும் என்பதை தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. .20.10.2023 தேதி, தமிழ்நாடு உரிமம் பெற்ற சேவைப் பகுதியின் கீழ் வரும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சோதனைகள் நடத்தப்படும்.”
மேற்கண்ட குறுஞ்செய்திகளின்படி, பேரிடர்களின்போது, அவசர கால தகவல் தொடர்புகளை மேம்படுத்த இன்று ‘மொபைல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ சோதனை நடத்தப்பட உள்ளது என்பதால், இந்த எச்சரிக்கை அறிவிப்பு கேட்டு, பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்று விளக்கம் அளித்திருக்கிறார்கள்.
தேசிய, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்கள், மத்திய அரசின் தொலை தொடர்பு துறையுடன் இணைந்து, இந்த சோதனையை நடத்த உள்ளன. ‘மொபைல் போன் ஒலிபரப்பு எச்சரிக்கை’ என்பது, ஒரு அதிநவீன தொழில்நுட்பம். ஒரு மொபைல்போன் கோபுரத்தின் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள அனைத்து மொபைல் போன்களுக்கும், இயற்கை இடர்ப்பாடு குறித்த எச்சரிக்கை, ஒரே நேரத்தில் சென்றடையக் கூடிய வசதி உள்ளது.
சுனாமி, மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற வானிலை எச்சரிக்கைகள், பொது பாதுகாப்பு செய்திகள், வெளியேற்ற அறிவிப்புகள், பிற அவசர கால எச்சரிக்கைள் வழங்க, ‘மொபைல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ பயன்படுத்தப்பட உள்ளது. இதன் செயல்பாடு குறித்த சோதனை, இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடத்தப்பட உள்ளது.
பொதுமக்களின் மொபைல் போன்களில், அவசர எச்சரிக்கை தகவல் அனுப்பப்படும். இது சோதனையின் ஒரு பகுதி. உண்மையான அவசர நிலையை குறிக்காது. எனவே, இந்த சோதனை ஓட்டத்தால், பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. இதற்கு எதிர்வினையாற்ற வேண்டாம் என, பேரிடர் மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.