அனார்ச்சா : பெண்மையை சிதைத்து போட்ட ஆராய்ச்சி..!  

Published:

 

மருத்துவ உலகில் புதிய கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றும் கண்டுபிடிக்கும் போது அந்த கண்டுபிடிப்பாளரை உலகம் கொண்டாடும், விருது கொடுத்து கௌரவிக்கும்.

ஆனால், அந்த கண்டுபிடிப்புக்கு பின் கசப்பான உண்மைகளும், அதிர்ச்சி நிறைந்த சிலரின் பங்களிப்பும் இருக்கும். அது எந்த காலத்திலும் வெளியுலகத்திற்கு தெரியாமலே போய்விடும்..!

தெரியாமல் என்பதைவிட.. மறைக்கப்பட்டுவிடும் என்பதுதான் சரியாக இருக்கும்..!

அப்படி மறைக்கப்பட்ட  ஒரு பெண்ணின் கதைதான் இது

 அவள் பெயர் அனார்ச்சா, அவள் ஒரு அடிமைப்பெண். அடிமைகள் அவர்கள் உடல் மீது கூட ஆதிக்கம் செலுத்த முடியாத காலம் அது. அவர்கள் உடல் அவர்களுக்கு சொந்தமில்லை.

பதினெட்டு வயதுகூட நிரம்பாத அந்த பருவப் பெண்ணுக்கு யாரோ ஒரு ஆண் மூலம் கர்ப்பம் திணிக்கப் பட்டிருந்தது. முகம் தெரியாத அந்த ஆணின் கருவை சுமந்து கொண்டே தன் எஜமானுக்கு ஆன எல்லா வேலைகளையும் செய்து வந்தாள். அந்த கறுப்பின அடிமைப்பெண்.

அது கி.பி.1846-க்கும் 1849-க்கும் இடைப்பட்ட காலம். பெண்களின் கர்ப்பபை மற்றும் பெண்ணுறுப்பு பற்றிய தொடர்ச்சியான ஆய்வுகள் நடந்து கொண்டிருந்த காலம்.

தெற்கு கரோலினாவைச் சேர்ந்த டாக்டர் ஜேம்ஸ் மரியன் சிம்ஸ் என்பவர் இந்த ஆய்வில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார். ஒடுக்கப்பட்ட கறுப்பர்கள் மீதும், ஏழை அயர்லாந்து பெண்கள் மீதும் இந்த கசாப்புக்கடை பாணியிலான, பயங்கர கொலைகார ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

2.bp.blogspot.com Vn6HHrKR0U8 VNTG5jB 6jI AAAAAAAADCU GKmCm0uLL6w s1600 James Marion Sims - 2026
டாக்டர் ஜேம்ஸ் மரியன் சிம்ஸ்

இன்று டாக்டர் சிம்ஸ், ‘நவீன மகப்பேறு மருத்துவத்தின் தந்தை’ என்று கொண்டாடப்படுகிறார். இந்த ஆய்வுக்கு பின்னால் புறக்கணிக்கப்பட்ட.. ரணங்கள் நிறைந்த.. ரத்தம் சிந்திய பெண்களின் வாழ்க்கை ஒளிந்திருக்கிறது. அப்படிப்பட்ட பெண்களில் ஒருத்திதான் அனார்ச்சா!

அனார்ச்சாவிற்கு எழுதப்படிக்கத் தெரியாது. அதனால் அவள் சொல்லச் சொல்ல, டாக்டர் அலெக்ஸாண்ட்ரியா சிலிஞ்ச் என்பவர் ஆங்கிலத்தில் அந்த கொடூரத்தை புத்தகமாக எழுதினார். புத்தகத்தின் வரிகள் ஒவ்வொன்றும் படிப்பவர்கள் மனதை பதைபதைக்க  வைக்கும்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பகல் முழுவதும் கொளுத்தும் வெயிலில்.. பருத்திச் செடியில் இருந்து பருத்திகளை பறித்துப் போடுவதுதான் கர்ப்பிணிப் பெண்ணான அனார்ச்சாவின் வேலை. தோட்ட வேலை முடிந்து மாலை வீட்டுக்கு வந்தால், வீட்டில் முதலாளியின் குழந்தைகளை கவனிக்க வேண்டும். மற்றவர்களுக்கு சமைத்து போட வேண்டும்.

ஒரு நாளில் 18 மணி நேரம் தனது எஜமானருக்காக உழைத்தாள் அனார்ச்சா. ஓய்வே அறியாத உழைப்பு, உடலை மோசமான நிலைக்கு கொண்டு போனது. குச்சியாய் உடல் மெலிந்தது. எலும்புகள் எல்லாம் கொடூரமாக வலித்தன.

நிறை மாதம் வேறு… எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற மகிழ்ச்சி அவளிடம் நிரம்பி வழிந்தது.

ஒரு அடிமைப்பெண்ணின் வாழ்க்கை மிக மிக சிக்கலானதுதான், ஆனாலும் இத்தகைய அழகிய நிமிடங்கள் அந்தப் பெண்களிடம் இருந்து பறிக்கப்படாமல் இயற்கை விட்டு வைத்திருந்தது.

அன்று பின்னிரவு…

அவளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

விடிவதற்குள் குழந்தை பிறந்து விட வேண்டும் என்று அவள் இறைவனை வேண்டினாள். விடியற்காலை அவளுக்காக பருத்திக் காட்டு வேலை காத்திருந்தது. குழந்தை பிறந்தது என்று சொல்லி வேலைக்கு போகாமல் இருக்க முடியாது.

இரவு முழுவதும் போனது. அவளின் வலியும் முடிவுக்கு வரவில்லை. குழந்தையும் பிறக்கவில்லை. வலியோடு வேலைக்கு சென்றாள். இப்படியே மூன்று நாட்கள் கடந்தது… அனார்ச்சாவின் நிலை கவலைக்கிடமானது.

இனி இந்த அடிமைப்பெண்ணால் எந்த வேலையும் செய்ய முடியாது என்பது நிச்சயமாக தெரிந்தபின், மனசில்லாமல் மருத்துவமனைக்கு அனார்ச்சாவை அனுப்பிவைத்தார் அவளது முதலாளி.

மருத்துவமனையில் தரையில் படுக்க வைக்கப்பட்டாள். டாக்டர் சிம்ஸ் அந்த அறைக்குள் நுழைந்தார். மூன்று நாட்களாக குழந்தையைப் பெற்றெடுக்க அவளின் நிலையைப் பார்வையிட்டார்.

அப்போதெல்லாம் இப்படி நடந்தால், அந்த பெண்ணுக்கு மரணத்தை தவிர வேறு வழியில்லை.

டாக்டர் சிம்ஸ் கர்ப்பபையில் சிக்கியிருக்கும் குழந்தையை வெளியே இழுத்தால் என்னவாகும் என்று தெரிந்துகொள்ள விரும்பினார்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

உடனே அருகில் கிடந்த சுத்தப்படுத்தப்படாத, துருப் பிடித்த, ஒரு பெரிய இடுக்கியை எடுத்து அவளின் பிறப்புறுப்பில் நுழைத்து, குழந்தையின் தலையைப் பிடித்து இழுத்தார்.

1.bp.blogspot.com - 2026

டாக்டருக்கு குழந்தையை பத்திரமாக எடுக்க வேண்டும் என்ற அக்கறை மட்டுமே இருந்தது. அனார்ச்சாவைப் பற்றி எந்த கவலையும் அவருக்கு இல்லை. அளவுக்கு மீறிய பெரிய இடுக்கி என்பதால் அனார்ச்சாவின் பெண்ணுறுப்பில் காயங்களும், கிழிசல்களும் ஏற்பட்டன.

அடிமைப்பெண்களுக்கு என்றே மருத்துவமனையின் பின்புறம் இடம் ஒதுக்கப் பட்டிருந்தது. அங்கு தரையில் நீண்ட நாட்கள் பஞ்சத்தில் அடிப்பட்டது போல் பல அடிமைப்பெண்கள் படுத்துக் கிடந்தார்கள்.

இவற்றையெல்லாம் பார்த்த அனார்ச்சாவிற்கு தனது விதி எப்படியோ? என்ற பயம் வந்தது. இவர்களைப்போலவே தானும் வேதனையை அனுபவிக்க வேண்டிவருமோ, தன்னை யாராவது இந்த நரகத்தில் இருந்து காப்பாற்றுவார்களா? பலவிதமாக சிந்தித்தாள்.

குழந்தையை வெளியே எடுக்க இடுக்கியை பயன்படுத்தியதால் அவளின் பெண்ணுறுப்பு கடுமையாக பாதிக்கப் பட்டிருந்தது. இந்த வேதனையில் இருந்து அந்த பெண்ணை மீட்க யாரும் நினைக்கவில்லை.

மாறாக, நாளுக்கு நாள் அவளின் பெண்ணுறுப்பிலும், கர்ப்பபையிலும் என்னென்ன மாறுதல்கள் ஏற்படுகின்றன என்பதையே கவனித்துக் கொண்டிருந்தனர்.

1.bp.blogspot.com Y3JgdCZsLA8 VNTHgLlemtI AAAAAAAADCk yd091uJG Fo s1600 the gynecological work of j marion sims - 2026

சுற்றிலும் டாக்டர் சிம்ஸின் உதவியாளர்கள், டாக்டர்கள் சூழ்ந்து நிற்க, ஒரு மேஜையின் மீது அனார்ச்சா படுக்க வைக்கப்பட்டாள். அவளின் பெண்ணுறுப்பை தெளிவாக எல்லோரும் பார்ப்பதற்காக கால்களை விரிக்கச் செய்து, இடுக்கியைப் பயன்படுத்தி விரித்து பிடித்தபடி அனார்ச்சாவின் அந்தரங்கத்தை ஆராய்ந்தனர்.

அவள் எதுவும் பேச அனுமதிக்கப் படவில்லை. எப்போதும் அவள் ஆறாத ரணங்களோடும் வலியின் வேதனையிலுமே இருந்தாள்.

அனார்ச்சாவுக்கு தன் குழந்தையுடன் சேர்ந்து வாழ ஆசை. ஆனால், அதற்கு அனுமதிக்கப்படவே இல்லை. மார்பில் கட்டியிருக்கும் பாலின் வேதனை தாங்க முடியாததாக இருந்தது.

வாரங்கள் பல கடந்தன. மருந்தும், சரியான உணவும் இல்லாமல் வலியின் ரண வேதனையை தொடர்ந்து அன்பவித்தாள்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

அங்கிருந்து வெளியேறவும் அவளால் முடியவில்லை. முன்பின் தெரியாத யார் யாரோ அவளை தேடி வருவார்கள். யார் யாரிடமெல்லாமோ தனது பெண்ணுறுப்பைக்  காட்டியபடி படுத்திருப்பாள். அவர்கள் அதை தொட்டுப் பார்த்து ஏதேதோ பேசிக்கொள்வார்கள்; குறிப்பெடுப்பார்கள்; காயங்களைப் பற்றி கவலைப் படாமல் குரடை நுழைப்பார்கள்.

பெண்மையின் உணர்வுகள் மரத்துப்போய் ஜடமாய் மற்றவர்கள் முன் அவள் கிடந்தாள்.

மூன்று வருட ஆய்வுக்குப்பின் டாக்டர் சிம்ஸ், பெண்ணின் பிறப்புறுப்பு பற்றியும், குழந்தைப் பிறப்பில் அதன் செயல்பாடு பற்றியும் முழுதாக தெரிந்துக் கொண்டார். அதைப் பற்றி விரிவான கட்டுரைகளை வெளியிட்டார்.

உலகம் முழுவதும் இருந்து டாக்டருக்கு பாராட்டுகள் குவிந்தன. குழந்தைப் பிறப்பில் ரகசியமாக இருந்த பல முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டன. மர்மமாக இருந்த பல விஷயங்கள் வெளி உலகுக்கு தெரிய வந்தன.

சிம்ஸ்க்கு விருதுகள் தேடி வந்தன. ‘குழந்தை பிறப்பு மருத்துவத்தின் தந்தை’ என்ற பட்டமும் வந்து சேர்ந்தது.

ஆனால், கற்பனைக்கு கூட எட்டாத கொடுமைகளை அனுபவித்து, கட்டாயப்படுத்தி தியாகம் செய்யவைக்கப்பட்ட அனார்ச்சாவை யாரும் கண்டுகொள்ள வில்லை. உலகிற்கு தெரியப்படுத்தவும் இல்லை.

ஆய்வுகள் எல்லாம் வெற்றிகரமாக முடிந்த பின் அந்த  அடிமைப்பெண்ணின் அந்தரங்கம் அவர்களுக்கு தேவைப்படவில்லை.

டாக்டர் சிம்ஸ் புகழின் உச்சியில் ஏறிகொண்டிருக்க.. எல்லாவற்றுக்கும் காரணமாக இருந்த அனார்ச்சாவோ.. ஆடைகளற்று, அம்மணமாய் வீதியில் தூக்கி வீசப்பட்டாள்…!

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img