சுவடிகளைச் சேகரித்தவர்

Published:

 

 
கடந்த வாரம் ‘சுவடிகளைத் தேடி’ என்ற தலைப்பில் கரந்தையார் எழுதிய போதே இவரைப் பற்றியும் எழுத வேண்டும் என்று நினைத்தேன்.

பிரான்சிஸ் வைட் எல்லீஸ் என்ற பெயர் கொண்ட இந்த ஆங்கிலேயத் தமிழறிஞரை யாருக்கும் தெரியாது. தமிழகத்தின் பெரு நகரங்களில் கே.கே.நகர், அண்ணா நகர் போல எல்லீஸ் நகரும் இருக்கும்.

அதுவும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் உருவாக்கிய குடியிருப்புகளுக்கு இந்த பெயரை வைத்திருப்பார்கள். வைத்தவர் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்.

1.bp.blogspot.com - 2026

எல்லீஸ் என்ற பெயரில் திரைப்பட இயக்குநர் ஒருவர் இருந்தார். ‘சகுந்தலை’ போன்ற படங்களை  இயக்கியவர். எல்லீஸ் ஆர் டங்கன்  அவர் பெயர். அவருடைய பெயரில் தான் இந்த நகரங்கள் அமைந்திருக்கின்றன என்பதுதான் பலரின் எண்ணம். அந்தளவுக்கு இந்த அறிஞரை யாருக்கும் தெரியாது.

இங்கிலாந்தில் பிறந்த பிரான்சிஸ் வைட் எல்லீஸ் ஒரு ஆங்கிலேயர். சிறு வயதில் இருந்தே புத்திசாலியாக விளங்கியவர். இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியின் வருவாய்த் துறை செயலாளராக சென்னைக்கு வந்தார்.

எட்டாண்டுகள் அந்த வேலையைச் செய்தார். அதன்பின் சென்னை கலெக்டராக பதவி உயர்வு பெற்று 10 ஆண்டுகள் பணியாற்றினார். சென்னையின் குடிநீர் பஞ்சத்தைப் போக்குவதற்காக பல இடங்களில் கிணறுகளை தோண்டினார். அந்த கிணற்றின் அருகே தமிழில் கல்வெட்டு அமைத்தார். அதில் ‘இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்குறுப்பு’ என்ற நீரின் பெருமையை உணர்த்தும் திருக்குறளை பொறித்திருந்தார்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

இவரது பொறுப்பின் கீழ் இருந்த நாணயச்சாலையில் திருவள்ளுவர் உருவம் பதித்த இரண்டு நாணயங்களை வெளியிட்டார். பிரிட்டிஷ் மகாராணிகளின் உருவம் மட்டுமே பதித்து வரும் அந்தக் காலக்கட்டத்தில் இது பெரும் புரட்சி.

  கலெக்டரான பின் அவர் பல இந்திய மொழிகளை கற்றார். அந்த மொழிகளில் அவருக்கு தமிழே மிகவும் பிடித்திருந்தது. ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்ற கருத்தாக்கத்தை முதலில் உருவாக்கியவர் இவர்தான்.

தமிழ் மொழியை தெரிந்து கொண்டதோடு அவர் நின்று விடவில்லை. தமிழ் இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். அவற்றை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். திருக்குறளுக்கு விரிவான விளக்கம் எழுதினார். அதை முழுதாக முடிக்கும் முன்னே மரணத்தைத் தழுவினார்.

அவரின் திருக்குறள் விளக்கவுரை அரைகுறையாகவே அச்சிட்டு வெளியிடப்பட்டது.  யாரும் சொல்லாத பல விளக்கங்களை புதுமையாக சொன்ன அறிஞர் என்று தமிழறிஞர்கள் இவரை பாராட்டினர்.

தமிழ் மீது தணியாத தாகம் கொண்ட எல்லீஸ், பண்டைய இலக்கியங்களை சேகரித்து பாதுகாக்கவும் செய்தார். குறிப்பாக வீரமாமுனிவர் எழுதிய நூல்களை சேகரிப்பதற்காக தனது சொத்துக்களின் பெரும்பகுதியை விற்று செலவு செய்தார். அப்படி அவர் தேடும் போது கிடைத்த பொக்கிஷம்தான் ‘தேம்பாவணி’ என்ற காவியம். இவரது முயற்சி இல்லையென்றால் இந்த காப்பியம் நமக்கு கிடைக்காமலே போயிருக்கும்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

தமிழரின் சிறப்புகள் பற்றி பல ஆய்வுக் குறிப்புகளை எழுதி வைத்திருந்தார். அந்தக் காலக்கட்டத்தில்தான் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரை பார்த்துவிட வேண்டுமென்ற ஆசை அவருக்கு ஏற்பட்டது. அதற்காகவே சென்னையிலிருந்து மதுரை வந்தார்.  தமிழோடு தொடர்பு கொண்ட பல இடங்களைப் பார்த்தார். இங்கும் ஏராளமான சுவடிகளைச் சேகரித்தார்.

அதன்பின் ராமநாதபுரம் சென்றார். அங்கிருந்த தாயுமானவர் சமாதியை கண்டுருகினார். அப்போது அவர் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்தது. அது எதிரிகளால் வைக்கப்பட்டதா என்ற விவரம் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக சுய உணர்வை இழந்தார்.

மருத்துவ வசதி இல்லாத அந்த காலத்தில் மதுரைக்கு வரும் முன்னே மரணம் அவரைத் தழுவிக்கொண்டது. 1819 மார்ச் 10-ல் மதுரையைப் பார்க்க வந்த எல்லீஸ் மீண்டும் சென்னை திரும்பவே இல்லை.

சென்னையிலும் மதுரையிலும் அவர் சேகரித்து வைத்த ஓலைச் சுவடிகள் அனைத்தும் கேட்பாரற்று கிடந்தன. பெரிய அறைகளில் மலை போல் குவிந்திருந்த ஓலைச் சுவடிகளை ஏலம் விட ஆங்கிலேய அரசு முடிவு செய்தது.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

அந்த சுவடிகளின் மகத்துவம் அறியாத தமிழர்கள் யாரும் அவற்றை  விலை கேட்க முன்வரவில்லை. பல மாதங்கள் பயனற்றுக் கிடந்த சுவடிகளை செல்லரிக்கத் தொடங்கின.

பல ஆண்டுகள் அலைந்து திரிந்து, சொத்தை விற்று, சேகரித்த பொக்கிஷங்கள் எல்லாம் சென்னையிலும் மதுரை கலெக்டர் பங்களாவிலும் பல மாதங்கள் விறகாக எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

தமிழின் பெருமை உணர்ந்து, அதற்கு தொண்டாற்றிய எல்லீஸின் கனவும் சுவடிகளோடு சுவடியாக எரிந்து போனது. அவரை மறக்கக் கூடாது என்பதற்கு தான் எல்லீஸ் நகர் என்று அரசு பெயர் வைத்தது. ஆனால் யார் அந்த எல்லீஸ் என்று யாருக்குமே தெரியாததுதான் வேதனையின் உச்சம்..!

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img