
காஷ்மீரில் வாழுகின்ற மக்களை, துப்பாக்கி இல்லாமல் சந்திக்கவே இந்திய ராணுவம் விரும்புகிறது என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஒவ்வொரு நாடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது வழக்கம்.
இது குறித்து பொதுமக்கள் கவலைப்பட தேவையில்லை. பாகிஸ்தானின் எந்த நடவடிக்கையையும் சந்திக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது.
முந்தைய காலங்களில், காஷ்மீர் மக்களுடன் நாம் சுமூகமாக பேசினோம். 70 மற்றும் 80 ம் ஆண்டுகளில் துப்பாக்கி இல்லாமல் அவர்களை சந்தித்தோம். வரும் காலங்களிலும் இது தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
காஷ்மீர் மாநில முதன்மை செயலர் ரோதிக் கன்சால் கூறுகையில், மாநிலத்தில் முழு அமைதி நிலவுகிறது.
அசம்பாவிதம் இல்லை. காஷ்மீரில் அனைத்து சாலைகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு தேவையான மருத்துவ வசதி அளிக்கப்பட்டு வருகிறது .
சுகாதார அதிகாரிகள் மற்றும் அனைத்து துறையினரும் விழிப்போடு செயல்பட்டு வருகின்றனர்.
ஜம்மு, காஷ்மீர், லடாக்கில் சுதந்திரதினம் உற்சாகமாக கொண்டாடப்படும்.
பக்ரீத் பண்டிகை, ஜம்மு, காஷ்மீர், லடாக்கில் அமைதியாக கொண்டாடப்பட்டது.
இதனால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. ஜம்முவில் கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டுள்ளது.

சில இடங்களில் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, சுதந்திர தினத்தன்று, ஸ்ரீநகரில், தேசிய கொடியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்றி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



