பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ தனது மூகநூல் பக்கதத்தில் தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் ‘வணக்கம்’ என தமிழில் தொடங்கி பின்னர் ஆங்கிலத்தில் பேசுகிறார். இறுதியில் ‘இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்’ என முடித்துள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:
வணக்கம். அடுத்த சில தினங்களுக்கு கனடா மற்றும் உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்கள் தங்களுடைய அன்புக்குரியவர்களுடன் இணைந்து தை பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளனர். இந்த பண்டிகையின் ஒவ்வொரு நாளுக்கும் அமைதி, மகிழ்ச்சியுடன் இணைந்த சிறப்பு பொருளும் பாரம்பரியமும் உண்டு.
இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியை தமிழ் பாரம்பரிய மாதமாக கொண்டாட நாடாளுமன்றம் கடந்த ஆண்டு ஒருமனதாக ஒப்புதல் வழங்கியது. கனடாவில் வசிக்கும் தமிழர்களின் பாரம்பரியத்தை பிரதிபலிக்க ஒவ்வொருவரையும் நான் ஊக்குவிக்கிறேன். கனடாவாழ் தமிழர்களால் இந்த நாடு வலிமையானதாகவும் வளமானதாகவும் உருவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
நம் நாடு உருவாகி 150-வது ஆண்டு நிறைவடைந்துள்ள இந்த நேரத்தில், பல்வேறு கலாச்சாரம், மொழி மற்றும் நம்பிக்கைகளையும் கொண்டாடுவதற்கான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எனது குடும்பத்தினர் சார்பில் தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Canada Prime Minister’s Pongal Message: