இது முஸ்லிம்கள் மீதான தடையல்ல: டிரம்ப் விளக்கம்

Published:

உலகின் ஏழு பெரும்பான்மையான முஸ்லிம் நாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேற வருவோருக்கு டிரம்ப் நிர்வாகம் விதித்த தடைக்கு எதிராக நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துவரும் நிலையிலும், டிரம்ப் நிர்வாகம் அந்த உத்தரவை அமல்படுத்துவதில் கண்டிப்புடன் செயல்படுகிறது. டிரம்ப் வெள்ளிக்கிழமை இதற்கான நிர்வாக நடைமுறை உத்தரவில் கையெழுத்திட்டார்.

இந்நிலையில், இது முஸ்லிம்கள் மீதான தடை அல்ல என்று கூறிய அதிபர் டிரம்ப், இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில், ” மிகவும் பாதுகாப்பான கொள்கைகள்” கொண்டு வரப்பட்ட உடன், விசாக்கள் மீண்டும் கொடுக்கப்படும் என்று கூறினார்.

இருப்பினும் அமெரிக்க அதிபரின் இந்த நடவடிக்கை உலகம் முழுதும் பரவலாக கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த உத்தரவு அமெரிக்க அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று 16 மாநிலங்களின் தலைமை அரச வழக்குரைஞர்கள் கூறியுள்ளனர்.

இந்த உத்தரவு, அமெரிக்காவின் அகதிகள் திட்டத்தை ஒட்டுமொத்தமாக நிறுத்தியதுடன், சிரியாவிலிருந்து அகதிகள் வருவதை காலவரையறையின்றி தடை செய்துள்ளது. மேலும் ஏழு முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளிலிருந்து, எந்த மதத்தைச் சேர்ந்த மக்களும் வருவதை இது தாற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்படும்போது, அமெரிக்காவுக்கு விமானம் மூலம் வந்து கொண்டிருந்தவர்கள், அமெரிக்கா வந்திறங்கியவுடன் தடுக்கப்பட்டனர். அவர்களுக்கு செல்லுபடியாகும் விசா அல்லது குடியேற்ற அனுமதிப் பத்திரங்கள் இருந்த போதிலும், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர். வெளிநாடுகளில் விமான நிலையங்களில் இருந்து அமெரிக்காவுக்கு விமானம் மூலம் செல்லவிருந்த நிலையில், மேலும் எத்தனை பேர் இவ்வாறு திருப்பியனுப்பட்டனர் என்பது குறித்து தகவல் இல்லை.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கடந்த சனிக்கிழமை அதிபரின் இந்த உத்தரவுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் அமெரிக்காவில் உள்ள விமான நிலையங்களில் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கறிஞர்கள் பலர் இலவச சட்ட உதவி செய்தனர். மேலும், ஞாயிற்றுக்கிழமை வெள்ளை மாளிகைக்கு முன்பாகவும், நியூயார்க்கில் உள்ள டிரம்ப் டவருக்கு வெளியேயும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

அமெரிக்க கிரீன் கார்ட் வைத்திருப்பவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி ரெயின்ஸ் ப்ரீபஸ் கூறினார். ஆனால் இந்த உத்தரவு அமலுக்கு வந்ததில் இருந்து சிலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த உத்தரவு மிகவும் குழப்பமான நிலையில் அமல்படுத்தப்பட்டிருப்பதாக வரும் விமர்சனங்களை ப்ரீபஸ் நிராகரித்தார். அமெரிக்காவுக்கு பயணம் செய்து கொண்டிருந்த 3.25 லட்சம் பேரில் 109 பேர் மட்டுமே தடுத்து வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

ஆனால் ப்ரீபஸின் இந்தக் கருத்து குடியரசுக் கட்சியினர் சிலர் மத்தியில் எழுந்துள்ள கவலைகளைப் போக்கவில்லை. இந்த உத்தரவு, குறிப்பாக கிரீன் கார்ட் பெற்றிருப்பவர்கள் விஷயத்தில், மிகவும் மோசமாக அமல்படுத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க செனட் வெளியுறவு கமிட்டியின் குடியரசுக் கட்சித் தலைவர் செனட்டர் பாப் கார்க்கர் கூறினார். இதை சரிப்படுத்த நிர்வாகம் பொருத்தமான திருத்தங்களைச் செய்யவேண்டும் என்று அவர் கூறினார்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

அமெரிக்கா இப்போது, மனித நேயக் குறைவான தன்மை உள்ள நாடாகத் தோன்றுகிறது என்று கூறிய ஜனநாயக கட்சியின், செனட் எதிர்கட்சித் தலைவர் , சுக் ஷூமர், ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த உத்தரவை ரத்து செய்ய புதிய மசோதா ஒன்றை அறிமுகப்படுத்துவர் என்று கூறினார்.

Related articles

Recent articles

spot_img