இந்தியாவில் உள்ள ஏடிஎம் கருவிகளுக்குள் புகுந்து, அவற்றின் மூலம் ஏடிஎம் கார்டுகளின் விவரங்களைத் திருடும் முயற்சியில் வட கொரிய சைபர் திருடர்கள் முயற்சித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக ATMDTrack என்ற கம்ப்யூட்டர் வைரஸ் ஒன்றை கடந்த சில வாரங்களாக அவர்கள் உலவ விட்டுள்ளனராம்.
இந்தியாவில் உள்ள முக்கிய பொருளாதார நிறுவனங்கள் மற்றும் ஆய்வு மையங்களில் இந்த வைரஸ் ஒற்று வேலை செய்து, கார்டில் உள்ள விவரங்களைத் திருடி விடுமாம்.
‘டார்க்சியோல்’ என்ற பெயரில் பரப்பப்பட்ட ஒரு வைரஸ், 2013ஆம் ஆண்டு தென் கொரியாவில் உள்ள ஏராளமான கம்ப்யூட்டர்களுக்குள் புகுந்து, அவற்றிலிருந்த தகவல்களை திருடி கொண்ட விவரங்களும் தெரியவந்துள்ளன.
லாசரஸ் குரூப் என்ற நிறுவனம்தான் இந்த சைபர் குற்றங்களின் பின்னணியில் இருந்து செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. வட கொரிய அரசுடன் இந்த நிறுவனத்திற்கு நெருங்கிய தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த குரூப்தான் தற்போதும் ATMDTrack வைரஸை இந்திய ஏடிஎம் மையங்களில் பரவ விட்டு, அவற்றில் பணம் எடுக்கப் பயன்படுத்தப்படும் கார்டு விவரங்களைத் திருடும் முயற்சிகளில் இறங்கியுள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த வைரஸ் இந்திய ஏடிஎம் மையங்களில் புகுந்து விடாத அளவிற்குத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.