
இஸ்ரோ செலுத்திய சந்திரயான் 3 விண்கலம், புவி சுற்று வட்டப் பாதையை முடித்து, நிலவு நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இருந்து கடந்த 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், வெற்றிகரமாக புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. பிறகு, பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றத் தொடங்கியது.
இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லப்படுகிறது. ஏற்கெனவே 5 கட்டங்களாக சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு உயர்த்தப்பட்டது. சுற்றுப்பாதையை உயர்த்தும் செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சந்திரயான் 3 விண்கலம் புவியின் சுற்று வட்டப்பாதையை நேற்று நள்ளிரவு நிறைவு செய்துள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வரும் சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுப்பாதை படிப்படியாக குறைக்கப்பட்டு, நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்படும். அதன்பின் நிலவின் மேற்பரப்பில் ஆகஸ்ட் 23 அல்லது 24 அன்று சாப்ட் லேண்டிங் முறையில் சந்திரயாண் 3 விண்கலம் தரையிறங்கும்.