
சந்திரயான் 3 – வெற்றிகரமாக நிலவில் இறங்கி சாதித்துள்ளது. சாஃப்ட் லேண்டிங் எனப்படும், மெதுவாக தரையிறங்கும் பணியில் திட்டமிட்டபடி துல்லியமாக, அதே நேரத்தில் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது சந்திரயான் -3. இதற்காக அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்ஃபரன்ஸ் வாயிலாக தென்னாப்பிரிக்காவில் இருந்து பேசினார்.
‘சந்திரயான்-3’ விண்கலத்தை கடந்த ஜூலை 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது. ரூ.615 கோடி செலவில் 40 நாள் பயண திட்டத்துடன் அனுப்பப்பட்ட ‘சந்திரயான்-3’ விண்கலம், முதலில் புவிவட்டப் பாதையைச் சுற்றி வந்தது. பிறகு நிலவுவட்டப் பாதைக்கு மாற்றப்பட்டு, படிப்படியாக அதன் சுற்றுவட்டப்பாதை குறைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு உந்து கலனில் இருந்து ‘விக்ரம் லேண்டர்’ கருவி பிரிக்கப்பட்டது.
இந்த ‘லேண்டர்’ புதன்கிழமை இன்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தானியங்கி கட்டளைகள் மூலம், இறுதிக்கட்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இது பெரும் சவால் நிறைந்த பணி என்பதால், பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ‘சந்திரயான்-3’ குழுவினர், விஞ்ஞானிகள் பொறியாளர்கள் உன்னிப்பாக கவனித்து வந்தனர்.
கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் அனுப்பப் பட்ட ‘சந்திரயான்-2′ விண்கலத்தின்’ஆர்பிட்டர்’ கருவி, தற்போதைய ‘லேண்டர்’ கருவியுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டது, சாதகமான சூழ்நிலையாக கருதப்பட்டது. அந்த வகையில், சந்திரயான் 3-ஐ முதலில் அங்கே வரவேறது சந்திரயான் -2ன் ஆர்பிட்டரே. இரண்டும் தங்களுக்கு இடையே தகவல்களை பரிமாறிக் கொண்டன. இதனால், ‘லேண்டர்’ நிலவின் மேற்பரப்பில் மென்மையாக தரையிறங்குவதற்கான வாய்ப்பு அதிகரித்தது.
இன்று நிலவுக்கு மேலே 30 கி.மீ. உயரத்தில் ‘லேண்டர்’ இருந்தபோது, அதை நிலவில் தரையிறக்குவதற்கான முயற்சிகள் தொடங்கின. நிலவின் தரையை நோக்கி வினாடிக்கு 1.68 கி.மீ. வேகத்தில் ‘லேண்டர்’ சென்றது. நிலவின் ஈர்ப்புவிசையைப் பொறுத்து, ‘லேண்டரின்’ வேகத்தை கண்காணித்து கட்டுப்படுத்துவதில் விஞ்ஞானிகள் அதிக கவனம் செலுத்தினர்.
நிலவை நெருங்கும் ‘லேண்டரின்’ கடைசி ஏழு நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை என்று கருதப் பட்டதால், நொடிக்கு நொடி கண்காணிக்கப் பட்டு, செயல்படுத்தப் பட்டது.
இந்த ‘கிளைமாக்ஸ்’ நிகழ்வுக்கு திட்டமிட்டபடி அனைத்து ஏற்பாடுகளும் தயார் என இஸ்ரோ அறிவித்திருந்தது. நிலவில் லேண்டர் கருவி தரையிறங்கும் காட்சியை காண உலகமே ஆவலோடு காத்திருந்தது. மாலை 5.20 மணி முதல் இந்த நிகழ்வு இஸ்ரோவினால் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இஸ்ரோவின் யுடியூப் சேனலில் இந்த நிகழ்வை லைவ் கவரேஜில் 60 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து மகிழ்ந்தார்கள். சரியாக லேண்டர் தரையிறங்கியதும் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி பொங்க ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
தென்னாப்பிரிக்காவில் இருந்து வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் இஸ்ரோவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்து பெருமித உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.
முன்னதாக, இஸ்ரோவின் இந்த முயற்சி வெற்றியடைய வேண்டும் என்று நாடெங்கும் மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டு பிரார்த்தனைகளைச் செய்தனர்.