உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 3 நீதிபதிகள் இன்று பதவியேற்க உள்ளனர். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒரிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வினீlத் சரண் மற்றும் உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதனை மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டதை அடுத்து, இன்று 3 பேரும் இன்று காலை நடைபெறும் விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர். அவர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
இந்த மூன்று நீதிபதிகளின் நியமனத்தை தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 25 ஆகவும், உச்சநீதிமன்ற பெண் நீதிபதிகள் எண்ணிக்கை 3 ஆகவும் உயர உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பதவியேற்பு வரிசையில் நீதிபதி ஜோசப் பெயர் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் மூத்தவர் எனும் வகையில் ஜோசப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் குழு தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து வலியுறுத்த முடிவு செய்துள்ளது.