
தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 33). மத்திய ரிசர்வ் போலீஸ் பிரிவு(சி.ஆர்.பி.எப்.) துணை தளபதி. இவர் காஷ்மீர் அனந்தநாக் மாவட்டத்தில் பணிபுரிந்து வந்தார்.
விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த அவர் கடந்த 14-ந்தேதி மீண்டும் காஷ்மீருக்கு திரும்பினார். அவரது மனைவி 20-ந்தேதி அங்கு சென்றார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கி இருந்த வீட்டில் அரவிந்த் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
2014-ம் ஆண்டு நேரடியாக சி.ஆர்.பி.எப்.பில் அதிகாரியாக பணியில் சேர்ந்த அவர், 40-வது பட்டாலியன் பிரிவில் பணியாற்றி வந்தார். முதற்கட்ட விசாரணையில் அவருக்கு குடும்ப பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.
அவர் தங்கியிருந்த குடியிருப்பு பகுதி வாழ்வதற்கு உகந்தது இல்லை அதனால்தான் அரவிந்த் தற்கொலை செய்துகொண்டார் என்று சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதனை சி.ஆர்.பி.எப். மறுத்துள்ளது. மேலும் அரவிந்த் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சி.ஆர்.பி.எப். அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.



