
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற நடராஜர் கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தில், பட்டாசு ஆலை அதிபரின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்தத் திருமண விழா ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்ற விதம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தில், சிவகாசி பட்டாசு ஆலை அதிபர் குடும்ப திருமண நிகழ்ச்சி நடந்த விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதை அடுத்து சிதம்பரம் கோயிலின் பட்டு தீட்சிதர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சிதம்பரம் கோவிலில் தங்கத்தால் வேயப்பட்ட அம்பலமாகிய மேற்கூரையின் கீழ் நடராஜர் சந்நிதி திருச்சிற்றம்பலம் உள்ளது. இந்த இடத்தில் நின்று பெருமானை வணங்குவதற்கே பெரும் சிரமங்களைச் சந்திக்கின்றனர் பக்தர்கள்.

திருச்சிற்றம்பல மேடையில் நின்று பெருமானை தரிசிக்க அவ்வளவு எளிதாக யாரும் அனுமதி பெற்று நின்றுவிட முடியாத சூழல் இருப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். ஆனால், ஒரு தனிப்பட்ட நபரின் குடும்ப நிகழ்ச்சிக்காக, திருச்சிற்றம்பலத்தின் தங்கக் கோபுரம் மீது ஏறியும் ஆயிரங்கால் மண்டப பகுதிகளிலும் தோரணங்கள் கட்டியும் மரபு மீறப் பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, ஆன்மிக அதிர்வலை கொண்ட ஆயிரங்கால் மண்டப பகுதியில் பக்தர்கள் மிகுந்த பயபக்தியுடன் வெறும் கால்களால் மட்டுமே நடக்கின்றனர். ஆனால், திருமண நிகழ்ச்சி என்று கூறி, பலர் செருப்பு அணிந்து ஏதோ திருமண மண்டபத்துக்கு வருவது போல் வந்து சென்றதும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக அரசியல் ரீதியாகவும் நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்த ஒரு காரணத்தை முன்னிட்டு, சிதம்பரம் கோயிலை அரசு கையகப் படுத்த வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதை அடுத்து ஆகம விதிகளை மீறயதாகக் கூறி, சிதம்பரம் கோவில் பட்டு தீட்சிதர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

